உலகம் முழுவதும் பதட்ட நிலையை உருவாக்கியுள்ள நிகழ்வுதான் ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் பதற்றம். இந்த போர் பதற்றத்தினால் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ பொருளாதார சரிவுகள் நேர்ந்த வண்ணம் உள்ளன. வீழும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல நாடுகள் யோசனையிலும், சட்டங்களை அமல்படுத்தலிலும் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவிலும் ரஷ்யா – உக்ரைன் இடையே போர் பதற்றத்தின் காரணமாக நேரடி மற்றும் மறைமுக தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டு கொண்டிருக்கிறது. அதனின் ஒரு பகுதியாக ரஷ்யா – உக்ரைன் இடையே போர் பதற்றம் நீடித்தால், இந்தியாவில் பெட்ரோல், டீசல், கோதுமை, உலோகங்களின் விலை உயரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
ஏற்கனவே, ரஷ்யா மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகள் அச்சம் காரணமாக, வாகன எக்ஸாஸ்ட் சிஸ்டம் மற்றும் மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பல்லேடியம் என்ற உலோகத்தின் விலை சமீபத்திய வாரங்களில் உயர்ந்துள்ளது.
கோதுமை ஏற்றுமதியில் ரஷ்யா முதலிடத்திலும், உக்ரைன் நான்காவது இடத்திலும் உள்ளதால், கருங்கடல் பகுதியில் இருந்து தானியங்கள் வருவதில் தடங்கல் ஏற்பட்டால், கோதுமையின் விலை உயரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் தற்போது நீடிக்கும் போர் பதற்றத்தால் ரஷ்யாவில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 96.7 டாலராக உயர்ந்துள்ளதாகவும், இந்த கச்சா எண்ணெய் விலையேற்றம் 2014 செப்டம்பருக்கு பிறகு அதிகம் எனக் கூறியுள்ள பொருளாதார நிபுணர்கள், உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நடந்தால், இயற்கை எரியாவு விலை பத்து மடங்கு அதிகரிக்கும் எனவும், பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும் எனவும் கூறியுள்ளனர்.