பிரம்ம கமலம் அல்லது நிஷாகந்தி (Epiphyllum Oxypetalum) என்பது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இரவில் மலரக்கூடிய அபூர்வ வகை மலர் பூக்கக்கூடிய தாவரமாகும். இது கள்ளி இனத்தைச் சேர்ந்த செடியாகும்.இதன் வெண்ணிறம் கொண்ட மலரானது, மூன்றுவிதமான இதழ்களைக் கொண்டு அழகாக இருக்கும். ஒரு இலையிலேயே பல பூக்கள் பூப்பதும் உண்டு.இத்தாவரம் தென் அமெரிக்காவின், மெக்சிக்கோ காடுகளைக் பிறப்பிடமாக கொண்டது. அங்கிருந்து இது உலகமெங்கும் பரவியுள்ளது.
சிவபெருமானுக்கு மிகுந்த விருப்பமான மலராக பிரம்ம கமலம் என்றழைக்கப்படும் நிஷாகாந்தி பூ உள்ளது. மிகுந்த மணம் நிறைந்த இந்த பூவானது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அதன் செடியில் பூக்கும் தன்மை கொண்டது. இது இரவு நேரம் பூத்து அதிகாலையில் வாடிவிடும் குணம் கொண்டதாகவும் உள்ளது.மலைப்பிரதேசத்தில் இந்த செடிகள் அதிகளவில் காணப்படும். சமநிலத்தில் வீடுகளில் ஒரு சிலர் இதை வளர்க்கின்றனர்.
இலங்கையில் இது சொர்க்கத்தின் பூ என்று அறியப்படுகிறது. புத்தருக்கு அஞ்சலி செலுத்த விண்ணுலகினர் மண்ணுலகில் பூவாக வருவதாக அவர்கள் கருதுகின்றனர். ஐரோப்பாவிலும், ஐக்கிய அமெரிக்காவிலும் பெத்லகேமின் நட்சத்திரம் என்று இது அறியப்படுகிறது. ஏசு பிறந்தபோது அவரைக் காண வந்த மூன்று அரசர்களுக்கு வழிகாட்டிய நட்சத்திரங்களின் குறியீடாக இதை அவர்கள் பார்க்கின்றனர்.
சீனா, வியட்நாம், தைவான், இந்தோனேசியா என ஒவ்வொரு நாடும், இரவில் பூக்கும் இப்பூக்களை அதிர்ஷ்டம், வெற்றி, அமைதி, காதல் ஆகியவற்றுடன் இணைத்து தங்களது நம்பிக்கைகளையும், பூக்களையும் ஒன்றாக வளர்க்கின்றனர்.இது தமிழ்நாட்டிலும் பரவலாக வளர்கிறது. இது கள்ளி இனத்தைச் சேர்ந்ததால் இதன் தண்டை வெட்டி வைத்தாலே இது வளரக்கூடிய தன்மை கொண்ட செடி ஆகும்.
ஆயுர்வேத மருத்துவத்தில் நிஷாகந்தி பூவின் இலைகள் தீக்காயங்களுக்கும், தோலில் ஏற்படும் மற்ற காயங்களுக்கும் பயன்படுத்தப்பட, இதன் பூக்கள் வயிற்றுவலி மற்றும் சிறுநீர்த்தொற்றுக்கு பயன்படுகிறது. வியட்நாமில் வாடிய மலர்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பிரசித்தி பெற்ற நிஷாகந்தி சூப், உடல் வலிமைக்கும், ஆண்மை குறைவிற்குமான டானிக்காக பயன்படுத்தப்படுகிறது.
மேலும், இப்பூக்களின் நறுமணம் மனதை மிகவும் அமைதிப்படுத்துவதால், மன அழுத்தம், ஒற்றைத் தலைவலி ஆகியவற்றைக் குறைக்க உதவுவதால், தியான வகுப்புகளில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் நிஷாகந்தியின் நறுமணத்திற்கு காரணமான அதில் நிறைந்துள்ள ‘Benzyl salicylate’-ஐ பயன்படுத்தி, Mystic Queen of Night போன்ற பிரபலமான வாசனை திரவியங்களும் தயாரிக்கப்படுகின்றன.
மிகுந்த வாசனையுடன் இருக்கும் அற்புத பூவான நிஷாகந்தியின் நடுவில் பார்த்தால் பிரம்மா அல்லது விஷ்ணு பகவான் உறங்கியிருப்பது போல் தோன்றும். அதன் மேல் நாகம் படை எடுத்திருப்பது போன்றும் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நம்மைச் சுற்றி ஆயிரம் பூக்கள் பூத்தாலும், ஆண்டுக்கு ஒருமுறை இரவில் பூக்கின்ற இந்த அரிதான, அழகான பூக்கள் நமக்கு எடுத்துரைக்கும் வாழ்க்கைப் பாடம் ஒன்றுதான். ஓரிரவே வாழ்ந்தாலும் ஒப்பற்ற வாழ்க்கை வாழ்ந்தால் உங்கள் வருகைக்கு இந்த உலகமே காத்திருக்கும் என்பது தான்!
பெண்கள் இருக்கும் வரலட்சுமி விரதமும் அதன் பலன்களும்