ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, இந்தியாவில் விற்பனையாகும் தனது அனைத்து ரகக் கார்களின் விலைகளையும் அடுத்த மாதம் உயர்த்தவுள்ளது.
இந்தியாவில் மிகவும் பிரபலமான சொகுசு கார் நிறுவனங்களில் ஒன்றுதான் ஜெர்மனியைச் சேர்ந்த ஆடி நிறுவனம். உலகின் பல நாடுகளில் ஆடி காருக்கு வரவேற்பு உள்ளது. இருப்பினும், இந்தியாவில் சற்று கூடுதலான வரவேற்பை ஆடி நிறுவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில், ஆடி நிறுவனம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. இந்தியாவில் விற்பனையாகும் நிறுவனத்தின் அனைத்து கார்களின் விலைகளையும் 2.4 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மூலப் பொருள்களின் விலை உயர்வு, விநியோகச் செலவுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் கார்களின் விலைகளும் உயர்த்தப்படுகின்றன. இந்த விலை உயர்வு அடுத்த மாதம் 20-ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி இந்தியா நிறுவனம் உள்நாட்டுச் சந்தையில் பெட்ரோலில் இயங்கக் கூடிய ஏ4, ஏ6, ஏ8 எல், க்யூ5, க்யூ7, க்யூ8, எஸ்5 ஸ்போர்ட்பேக், ஆர்எஸ் 5 ஸ்போர்ட்பேக், ஆர்எஸ் க்யூ8 ஆகிய கார் ரகங்களை விற்பனை செய்கிறது.
இது தவிர, மின்சாரத்தில் இயங்கக் கூடிய இ-ட்ரான் 50, இ-ட்ரான் 55, இ-ட்ரான் ஸ்போர்ட்பேக் 55, இ-ட்ரான் ஜிடி, ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடி ஆகியவற்றையும் இந்தியச் சந்தைகளில் நிறுவனம் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.