ஒரு குழந்தை பிறந்தால் அதன் மழலைச் சொற்களை கேட்க எல்லாருக்கும் ஆவலாக தான் இருக்கும். தெளிவற்ற குரலில் பிழையான உச்சரிப்புடன் பேசும் குழந்தைகளை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மறுபடி மறுபடி பேச சொல்லி தூண்டுவதை காணலாம்.
சில குழந்தைகளுக்கு முன்னதாகவே பல் முளைத்து விடும்.சில குழந்தைகளுக்கு தாமதமாகவே பல் முளைக்கும். முன்னதாகப் பல் முளைக்கும் குழந்தைகள் சிலர் தாமதமாகவே பேச ஆரம்பிக்கின்றனர். அதாவது பேசுவதற்கு வேண்டிய முக்கிய உறுப்பு நாக்கு. பல் முளைத்து பற்கள் கூடும்போது நாவுக்கு தடங்கல் ஏற்படுகின்றது என்று காரணமாக கூறப்படுகிறது.
ஆனால் முக்கிய காரணம் என்பது வேறு. குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இருந்தாலும், அதை தூண்டி குழந்தையை பேச வைக்கும் பொறுப்பு குடும்ப உறுப்பினர்களுக்கே உண்டு. வெகு அரிதாக குழந்தையின் தொண்டையில் அழற்சி,நரம்பு திசுக்களின் வளர்ச்சி குறைவு போன்ற காரணங்களால் குழந்தையின் நாக்கு புரண்டு தாமதமாக பேசத் தொடங்கும்.
இதற்கான அறிகுறிகள்:
குழந்தைக்கு பேச்சுதிறன் குறைபாடு என்பதை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று உங்கள் பேச்சு புரிந்துகொள்ளாததால் அவர்களால் உடனடியாக பதில் அளிக்க முடியாமல் போகலாம். அல்லது அவர்கள் பதில் அளிப்பது சிரமமாக இருக்கலாம். அதனால் மொழி பற்றாக்குறையா அல்லது அவர்கள் பதில் அளிப்பது அதாவது பேசும் திறன் பற்றாக்குறையா என்பதை கவனியுங்கள். பெரும்பாலும் பேசும் திறன் தான் குழந்தைக்கு குறைபாடாக இருக்கும்
- ஒரு வருடம் கடந்தும் அவர்கள் மெளனமாகவே இருந்தால் சைகையால் மட்டுமே அவர்கள் வேண்டுகின்ற பொருளை கேட்டால் அது பேச்சுதிறன் குறைபாடாக இருக்கலாம்.
- இரண்டு வயதை கடந்தும் ஒரு வார்த்தை அல்லது அதையும் பேசாமல் வாயை அசைத்து உடனே அடங்கிவிடுவதும் கூட தாமதமான பேச்சுத்திறன் குறைபாடாகத்தான் இருக்கும்.
- குழந்தை 3 வயதை நெருங்குகிறது ஆனாலும் ஒரு வார்த்தையை சேர்த்து பேசவில்லை. பேசுவதில் சிரமம், உச்சரிப்பிலும் மிக மோசம் போன்றவற்றை கண்டால் அவர்கள் வளரும் போது வார்த்தைகளை சேர்த்து கோர்வையாக்கி பேச அதிகம் திணறுவார்கள்.
- குழந்தைக்கு கேட்கும் திறனில் குறைபாடு இருக்கலாம். இதை குழந்தையின் 3 அல்லது 4 ஆம் மாதத்திலேயே கண்டறிந்துவிட முடியும். ஒருவேளை இதை கவனிக்க தவறினால் குழந்தை வளர வளர பேசுவதை கேட்க முடியாமல் அவர்கள் பேசுவது சிரமமாக இருக்கலாம்.
- ஆட்டிஸம் பாதித்த குழந்தைக்கும் இந்த குறைபாடு நேரலாம். இதனால் இவர்களது உடல் தகவல் தொடர்புகளை பாதிக்கின்றது. உளவியல் ரீதியாகவும் இந்த குறைபாடு நேரலாம்.இது வெகு அரிதானது என்பதால் குழந்தை பேசாவிட்டால் இதுதான் காரணம் என்று பயந்துவிட வேண்டாம்.
- கற்றல் குறைபாடுகள் காரணமாக இருக்கலாம். குழந்தைகள் வளர்ந்த பிறகு தான் கற்றல் குறைபாடு நேரிட வாய்ப்புண்டு என்று சொல்லலாம். அறிவுசார்ந்த குறைபாடுகள் என்றும் இதை சொல்வதுண்டு.