தனது 87 வயதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்று சான்றிதழ்களைப் பெற்றுள்ளார் முன்னாள் முதலமைச்சர்.
‘நம்புறவங்களுக்கு வயசு ஒரு நம்பர் தான்’ என்று தர்பார் திரைப்படத்தில் ரஜினி கூறியதை ஹரியானா மாநிலத்தின் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சௌதாலா நிஜத்தில் நிரூபித்து காட்டியுள்ளார்.
ஓம் பிரகாஷ் சௌதாலா, ஹரியானா மாநிலத்தில் 1989 முதல் 1991 வரை மூன்று முறை இடைக்கால முதலமைச்சராகவும் 1999 முதல் 2005 வரை முதலமைச்சராகவும் இருந்துள்ளார்.
கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வினை எழுதி தற்போது தேர்ச்சிப் பெற்றுள்ளார் ஓம் பிரகாஷ் சௌதாலா. முதலில் இவர் 12 ஆம் வகுப்பு பொது தேர்வினை எழுதினார். 10 வகுப்பு ஆங்கில பாடத்தில் தேர்ச்சி பெறாத காரணத்தினால் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு நிறுத்திவைக்கப்பட்டது. அதனால் இவர், 10 வகுப்பு ஆங்கில பாடத் தேர்வினை தனியாக எழுதினார். மேலும் இதில் நூற்றுக்கு 88 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார் ஓம் பிரகாஷ் சௌதாலா.
இதன் மூலம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் இதற்கான சான்றிதழ்களை நேற்று ஹரியானா தலைநகர் சண்டிகரில் உள்ள தேர்வு மையத்தில் பெற்றுள்ளார். ஓம் பிரகாஷ் சௌதாலா செய்த இந்தச் செயல் பலரையும் கவர்ந்து வருகிறது. பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Badhai!!! #Dasvi https://t.co/ATarQf0AfD
— Abhishek 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐚𝐧 (@juniorbachchan) May 10, 2022
ஓம் பிரகாஷ் சௌதாலா ஹரியானாவில் மிகப் பெரிய அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர். முன்னாள் துணைப் பிரதமரின் மகனான ஓம் பிரகாஷ் சௌதாலா ஊழல் புகாரில் சிக்கி, சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரின் பேரனான துஷ்யந்த் சௌதாலா ஹரியானாவின் துணை முதலமைச்சராக உள்ளார்.