ராமஜெயம் கொலை வழக்கில் 8 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொண்டனர்.
தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம். தொழிலதிபரான இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29 தேதி நடைபயிற்சி சென்றபோது, கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரின் உடல் திருச்சி-கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழகத்தையே மிகவும் பரபரப்பாக்கிய இந்த கொலை சம்பவம் குறித்து முதலில் திருச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதன்பிறகு, வேறு சில விசாரணைப் பிரிவுகளுக்கும் வழக்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போது சிறப்பு புலனாய்வு குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
முன்னதாக உண்மை சோதனை நடத்துவதற்காக தமிழகத்தின் பிரபல ரவுடிகள் 13 பேருக்கு திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று சம்மன் அனுப்பட்டது. இதன்பேரில் மோகன்ராம், தினேஷ், நரைமுடி கணேசன், உள்ளிட்ட 13 பேர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகினர். பிறகு, சிலர் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில் சத்யராஜ், லட்சுமி நாராயணன், சாமி ரவி, சிவா, ராஜ்குமார், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து ஆகிய 8 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொண்டனர். இந்தச் சோதனைக்கு தென்கோவன் என்ற நபர் ஒப்புக்கொள்ளவில்லை.
இதையடுத்து, இந்த வழக்கு வருகிற 17 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அன்று சோதனை நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு! தீவிரவாதிகளின் சதியா? என என்.ஐ.ஏ தீவிர விசாரணை