சபரிமலை ஐயப்பன் கோயிலில் இதுவரை 5.50 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் தற்போது வார இறுதி நாட்கள் என்பதால், பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த நவம்பர் மாதம் 17 ஆம் தேதி பொதுமக்களுக்காக நடை திறக்கப்பட்ட முதல் நாள் 47,947 பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துள்ளனர். நடை திறக்கப்பட்டு, முதல் ஆறு நாட்களில் 2,61,874 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதுவரை 5 லட்சத்து 50 ஆயிரம் பேர் தரிசனம் செய்திருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் இருந்ததால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போது ஆன்லைன் முறையில் அதிகபட்சமாக ஒரு நாள் ஒன்றுக்கு 1.20 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். மேலும் உடனடி தரிசனத்திற்காக முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.