ஆந்திர மாநிலத்தில் 45 குரங்குகள் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஶ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பகுதிதான், சிலகம் கிராமம். இந்த கிராமத்திற்கு அருகில் வனப்பகுதி உள்ளது. இப்பகுதியில், அதீத துர்நாற்றம் காற்றில் பரவி வருவதை கிராம மக்கள் உணர்ந்துள்ளனர். இதையடுத்து, வனப்பகுதிக்கு மக்கள் செல்ல, அங்கு பார்த்தால் 45 குரங்குகள் இறந்துள்ளன.
இதைத்தொடர்ந்து, உடனடியாக இந்த செய்தியை வனத்துறையினருக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். பின்பு, வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், குரங்குகள் விஷம் உண்டதால் இறந்துபோய் இருக்கலாம் என யூகித்தனர்.
ஆனால், இதுவரை குரங்குகளின் இறப்பிற்கான சரியான காரணம் தெரியவில்லை. வனத்துறையினர், இம்மாதிரியான சம்பவத்தை நாங்கள் கண்டதில்லை என தெரிவிக்கின்றனர். அதேசமயம், குரங்குகள் விஷம் செலுத்தப்பட்ட வாழைப் பழங்களைத் தின்றதால் இறந்திருக்கலாம் என்றும், வாழைத்தோட்டங்களை குரங்குகள் நாசம் செய்வதால் வேண்டுமென்றே இதை யாரோ செய்திருக்கலாம் என்றும் கிராம வாசிகள் தெரிவித்துள்ளனர்.
உண்மை என்னவென்பது குரங்குகளின் பிரேத பரிசோதனைக்குப் பின்தான் தெரியவரும். இந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால், தற்போது சிலகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தொடரும் பதற்றம்! கோவை கார் வெடிவிபத்தில் புதிதாக மேலும் ஒருவரை கைது செய்த தனிப்படை