கடந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அகழாய்வு இயக்குனர் சக்திவேல் தலைமையில் தொல்லியல் அலுவலர்கள் பரந்தாமன், வேங்கடகுரு பிரசன்னா ஆகியோர் அகழாய்வில் ஈடுபட்டனர்.
1.42மீ தோண்டப்பட்ட ஆய்வுக்குழியில், பானைகள், கத்திகள், தண்ணீர் குடுவைகள் கண்டறியப்பட்டன, 70 செமீ நீளமுள்ள ஒரு வாளும் கண்டறியப்பட்டது. மேலும் 104செமீ மற்றும் 130செமீ ஆழத்தில் சேகரிக்கப்பட்ட கரிம மாதிரிகள் அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாநிலத்தின் ‘பீட்டா பகுப்பாய்வு கூடத்திற்கு’ அனுப்பி வைக்கப்பட்டன. அந்த பகுப்பாய்வின் காலக் கணக்கீடு முடிவுகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளன.
இம்முடிவுகளை நேற்று (மே 9) தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். கண்டறியப்பட்ட கரிம மாதிரிகளின் காலம் முறையே கி.மு.1615 மற்றும் கி.மு.2172 என்று கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாய்க் கூறிய முதலமைச்சர், தமிழகத்தில் இரும்பின் பயன்பாடு 4200 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துள்ளது என்றும் கூறினார்.
— Thangam Thenarasu (@TThenarasu) May 9, 2022
மேலும் கங்கைச் சமவெளி, கர்நாடகம் உள்ளிட்ட 28 இடங்களில் இரும்புகாலப் பண்பாடு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தற்பொழுது மயிலாடும்பாறையில் கண்டறியப்பட்ட இரும்பு மாதிரிகள் காலத்தால் முற்பட்டது என்றும், இந்த செய்தி நமக்கெல்லாம் பெருமையளிக்கக்கூடிய ஒன்று என்றும் கூறினார்.
தமிழக அரசானது, தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பிற பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அதன் முதல் பகுதியாக, இந்த ஆண்டு கேரளாவின் பட்டணம், கர்நாடகாவிலுள்ள தலைக்காடு, ஆந்திராவிலுள்ள வேங்கி, ஒடிசாவிலுள்ள பாலூர் பகுதிகளில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. மேலும், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளில் உள்ள குறியீடுகளை சிந்து சமவெளி முத்திரையுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்திடும் திட்டமும் இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட உள்ளது.
இது குறித்த செய்தியினை தொல்லியல் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு தனது அதிகார ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த நடவடிக்கைகளானது தமிழக தொல்லியல் ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
எப்போதும் இளமை, நார்ச்சத்து இன்னும் பல – ப்ரோக்கோலியின் பயன்கள் உள்ளே!