மும்பையில் வங்கி மோசடியில் 40-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பல லட்சம் ரூபாயை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாகவே ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியும் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், மொபைல் போனில் ஏதாவது அப்டேட் செய்ய வேண்டும் என்று வரும் செய்திகள் வாயிலாக வருகிற லிங்கை கிளிக் செய்வதன் மூலமாக மோசடிகள் நடந்து வருகின்றன. இதை அறியாத பலர் தங்களின் பணத்தை இழந்து வருகின்றனர்.
இந்நிலையில், மராட்டிய மாநிலம், மும்பையில் முக்கிய வங்கி வாடிக்கையாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட மோசடியில், 40 க்கும் மேற்பட்டோர் பல லட்சம் ரூபாயை இழந்துள்ளனர்.
கேஒய்சி மற்றும் பான் அட்டை விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என இவர்களுக்கு வங்கியில் இருந்து வருவது போன்று போலியான குறுஞ்செய்தி வந்துள்ளது. இதில் உள்ள லிங்கை கிளிக் செய்த வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து மூன்று நாட்களில் பல லட்ச ரூபாய் பறிபோனது.
வங்கியின் போலியான லிங்கை கிளிக் செய்வதன் மூலம் அது வங்கியின் இணையதளம் போன்றே இருக்கும் போலி இணையதளத்திற்கு கொண்டு செல்லும். இதையடுத்து வாடிக்கையாளர்களிடம் வங்கி கணக்கு குறித்த தகவல்களை உள்ளீடு செய்ததும் மூன்று நாட்களில் அவர்களின் வங்கி கணக்குகளில் இருக்கும் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.
இதுபோன்று வாடிக்கையாளர்களின் ரகசிய தரவுகளை கேட்கும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என மும்பை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இந்தியா – இலங்கைக்கு இடையே பணப்பரிவர்த்தனை; ரூபாய் செல்லுமா?