தென்காசியில் பாமகவின் மகளிர் அணி நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலை அடுத்த ரெங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் மாரியம்மாள். வயது 44. இவர் குருவிகுளம் ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் அணி நிர்வாகி. மாரியம்மாள் தன் கணவரோடு நேர்ந்த கருத்து வேறுபாடு காரணமாக ரெங்கசமுத்திரத்தில் மாரியம்மாள் தனது தந்தை முத்தையாவு மற்றும் தாய் சண்முகத்தாயுடன் வசித்து வந்துள்ளார்.
இதனிடையே, சமீபத்தில் மாரியம்மாள் இலவன்குளம் ரயில்வே தண்டவாளத்தின் அருகில் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து, தன் மகள் சாவில் மர்மம் இருப்பதாக மாரியம்மாளின் தாய், சண்முகத்தாய் சங்கரன்கோவில் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
இது தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து, போலீஸாரின் விசாரணையில் புளியம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த முத்துகாலாடி(57) என்பவர் தன் நண்பர் சுப்பையா பாண்டியன்(58) என்பவரோடு சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.
முத்துகாலாடி போலீஸூக்கு கொடுத்த வாக்குமூலத்தில், “எனக்கும், மாரியம்மாளுக்கும் இடையே தவறான பழக்கம் இருந்துவந்தது. இந்தநிலையில் என்னுடனான உறவைத் துண்டித்துவிட்டு அண்மைக்காலமாக மாரியம்மாள் இன்னொரு வாலிபருடன் பழகியதால் கொலை செய்தேன்” எனத் தெரிவித்துள்ளார். தற்போது, இருவரையும் நேற்று மாலை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
டபிள்யுபில் – விஸ்வரூபம் எடுத்த கௌர்; சுருண்ட குஜராத் அணி..