இந்தியாவிலிருந்து கடந்த 6 ஆண்டுகளில் உயர் கல்விக்காக 30 லட்சம் பேர் அயல்நாடு சென்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான முதல்நாள் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.பி. ராஜிவ் ரஞ்சன் சிங் உள்ளிட்டோர் உயர்கல்விக்காக அயல்நாடுகள் சென்றவர் குறித்து கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்கு மத்திய கல்வித் துறை இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் பதில் அளித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது;
கடந்த 2017 முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலத்தில் 30 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு சென்றுள்ளனர். வெளிநாடு செல்வோர் வாய்வழியாக தெரிவிக்கும் தகவல் மற்றும் வழங்கப்படும் விசா வகையின் அடிப்படையில் இந்த தகவல் சேகரிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டில் அயல்நாடுகளுக்கு சென்றவர்களில் 7.5 லட்சம் பேர் உயர்கல்விக்காக செல்வதாக தெரிவித்துள்ளனர். இதுபோல, 2021-ல் 4.4 லட்சம், 2020-ல் 2.59 லட்சம், 2019-ல் 5.8 லட்சம், 2018-ல்5.1 லட்சம், 2017-ல் 4.5 லட்சம் பேர் உயர்கல்விக்காக வெளிநாடு செல்வதாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு மத்திய கல்வித் துறை இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்தார்.
காதல் மாதம்; இவையெல்லாம் அவசியமா? – இன்றைய ஸ்பெஷல்!