கடலூரில் பள்ளி வேன் மோதியதில் 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், மேற்கு ராமாபுரத்தைச் சேர்ந்தவர் சீனுவாசன். இவர் நெடுஞ்சாலை துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தீபா. இவர்களின் குழந்தை தேஜஸ்வரன்(3).
இந்நிலையில், இன்று காலை கிழக்கு ராமாபுரத்தில் உள்ள அவரது தாத்தா வீட்டில் இருந்த தேஜஸ்வரன் அருகில் இருந்த சாலையில் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வேன் திடிரென தேஜஸ்வரன் மீது மோதியது. இதில் குழந்தையின் தலை மீது பள்ளி வேன் சக்கரம் ஏறியதால் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதனைப்பார்த்த உறவினர்களும் பொதுமக்களும் கடும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
இதுகுறித்து, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளி வேன் மோதி 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாநகராட்சி நிதிநிலை அறிக்கை: பள்ளி மாணவர்களுக்கு மாலையில் ‘சிறு தீனி’