தருமபுரி மாவட்டத்தில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகத்தில் வனத்தை ஒட்டிய விளைநிலங்களில் கடந்த பல மாதங்களாக யானைகள் அவ்வப்போது நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதன்காரணமாக யானைகளை அடர்வனப் பகுதிக்கு இடம் பெயரச் செய்ய வனத்துறை சார்பில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதும், யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது.
இந்நிலையில், பாலக்கோடு வட்டம், காளி கவுண்டன் கொட்டாய் அருகில் உள்ள பாறைக் கொட்டாய் பகுதியில் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி நேற்றிரவு 2 பெண் மற்றும் 1 ஆண் என 3 யானைகள் உயிரிழந்தன. இந்த யானைகளுடன் வந்த 2 குட்டி யானைகள் அப்பகுதியில் சுற்றி வருகின்றன.
இதையடுத்து, வனத்துறையினர் யானைக்குட்டிகளை வனப்பகுதிக்கு இடம்பெயரச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்து இருந்த பாறைக் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரை பாலக்கோடு காவல்துறையினர் கைது செய்தனர்.
இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்குள்ள விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்திய பெண் அமெரிக்காவில் நீதிபதி; பெருமையான நிகழ்வு..