சென்னையில் காற்றாடி மாஞ்சா நூல் அறுத்து பெண் மென்பொறியாளர் உள்பட 2 பேர் காயம் அடைந்ததில், பள்ளி மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாஞ்சா நூல் காற்றாடி பறக்கவிடவும், மாஞ்சா நூல் விற்பனைக்கும் ஏற்கனவே சென்னை காவல்துறையினர் தடைவிதித்துள்ளனர். இருப்பினும் சிலர் மறைமுகமாக பல இடங்களில் மாஞ்சா நூல் தயாரித்து விற்கும் வேளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக மாஞ்சா நூல் காற்றாடி விடுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இவாஞ்சலின் என்ற மென்பொறியாளர் தனது நண்பர் அஜய் என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் கோயம்பேடு மேம்பாலத்தில் அரும்பாக்கம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில், அந்த வழியாக வந்த அறுந்த நிலையில் வந்த மாஞ்சா நூல் 2 பேரின் கழுத்திலும் சிக்கி அறுத்தது. இதில் நிலை குலைந்த இவாஞ்சலின் மற்றும் அஜய் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனர். இந்தச் சம்பவத்தில் இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. இவர்கள் இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் கோயம்பேடு காவல்துறையினர் மாஞ்சா நூல் காற்றாடி பறக்கவிட்டு காயம் ஏற்படுத்திய அதே பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை கைது செய்தனர். தொடர்ந்து மான்ஜா நூல் எங்கிருந்து வாங்கியது என்பது குறித்து அந்த மாணவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கை தமிழர்களுக்கு வீடு – ‘இது ஒரு மைல்கல்’ என அண்ணாமலை பதில்..