புதுச்சேரியில் 18-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் உயிரிழந்தோர் நினைவாக கடலில் பால் ஊற்றி, பூக்கள் தூவி மலர் வளையம் வைத்து மலரஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி சுனாமி ஏற்பட்டது. இந்தியாவில் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் சுனாமி பேரலையால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதில் புதுச்சேரியில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்தனர். இதனை தொடர்ந்து ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 26-ம் தேதி சுனாமி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் சுனாமியால் இறந்தவர்களுக்கு புதுச்சேரி கடற்கரையில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் 18-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் கடற்கரை சாலை காந்தி சிலை பின்புறம் அனுசரிக்கப்பட்டது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு கடலில் பூக்களை தூவி, பால் ஊற்றி சுனாமியின் போது உயிரிழந்தவர்களின் படத்திற்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லஷ்மிநாராயணன், சட்டமன்ற உறுப்பினர்கள் பாஸ்கர், பிரகாஷ்குமார், லஷ்மிகாந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடற்கரை நோக்கி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக டூப்ளே சிலையை அடைந்தது. அங்கு அவர்கள் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
வைத்திக்குப்பத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி, கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். புதுவையின் 18 மீனவ கிராமங்களிலும் மீனவர்கள் பணிக்கு செல்லாமல் அஞ்சலி செலுத்தினர்.
இந்திய ராணுவத்திற்கு புதிய ஏவுகணைகள்.. ஒப்புதல் அளித்த பாதுகாப்புத்துறை