புதுச்சேரி மாநிலம் ஏனாம் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் சூழ்ந்ததால் அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஏனாம் பகுதி கோதாவரி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது. ஏனாம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் புதுச்சேரி மாநிலத்துக்குள் அடங்கும். தற்போது இந்த ஏனாம் வட்டாரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதனால், தாழ்வான பகுதிகளான தோலேஸ்வரம், பாலயோகி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. எனவே அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்து இருக்கிறார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை மீட்கும் பணியில் காவல் மற்றும் தீயணைப்பு துறையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 14 மீனவ கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஏனாம் வட்டார அதிகாரிகள் கூறியதாவது:
16.12 லட்சம் கன அடி தண்ணீர் கோதாவரி ஆற்றில் தற்போது செல்கிறது. இது மேலும் உயரக்கூடும் என அறிவிப்பு வந்துள்ளது. இதையடுத்து கரையோர மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், பொதுப் பணித் துறையினர் வெள்ளத் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கூறியவாறு அவர்கள் தெரிவித்தனர்.
நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை