பாட்டாளி மக்கள் கட்சியின் எதிர்கால நலன் கருதி, அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்த ஜி.கே. மணி கௌரவத் தலைவரானார். பாமக கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்றுள்ளார். அன்புமணி அவர்கள், சென்னை முதல் கன்னியாகுமரி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதார். இந்தப் பயணத்தின் போது வன்னியர் சங்கம் முதல் தற்போது பாமக கட்சி வரை இருக்கும் மூத்த நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்டோரை சந்தித்து, எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கு தயார்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாமக கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு தரவேண்டும். கட்சியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான், அன்புமணி ராமதாஸ் பாமகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றார் என பாமகவின் மூத்த நிர்வாகிகள் கூறினர்.
இதனையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை திருவேற்காட்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தான் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான தீர்மானத்தை அப்போதைய தலைவராக இருந்த ஜிகே மணியே வாசித்தார். அதில் கட்சியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, தலைவர் பதவியை அன்புமணி ராமதாஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார். பாமகவின், இளைஞரணித் தலைவராக இருந்த போதும் சரி, இப்போது தலைவராக இருக்கும் போதும் சரி அன்புமணி ராமதாஸ் பாமக 2.0 எனும் திட்டத்தை அடிக்கடி சொல்லி வருகிறார்.
கட்சியில் இளைஞர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் எனவும், திமுக மற்றும் அதிமுக அல்லாத ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும் எனவும் பல திட்டங்கள் அன்புமணி ராமதாசிடம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, கட்சியை பலப்படுத்தும் நோக்கில் பாமகவின் மூத்த நிர்வாகிகள் மற்றும் கட்சியில் இணைந்துள்ள இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில், சென்னை முதல் கன்னியாகுமரி வரை புதிய சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ள அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டுள்ளார்.
தற்போது பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வரும் அவர், அதற்குப் பின் இந்த சுற்றுப் பயணத் திட்டத்தை மேற்கொள்வார் என பாமக நிர்வாகிகள் கூறியுள்ளனர். கட்சியில் யாரையும் விட்டுத் தர முடியாது, என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.
அன்புமணி ராமதாஸ் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதும், அதிக அளவில் இளைஞர்களை கட்சியில் இணைய வைக்க வேண்டும் எனவும், இந்தப் பயணத் திட்டத்தை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற சுற்றுப்பயணங்களை ஏற்கனவே, பல அரசியல் தலைவர்கள் செய்திருக்கும் நிலையில், அன்புமணி ராமதாஸ் அதில் வித்தியாசமாய் என்ன செய்யப் போகிறார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணம்! சிபிசிஐடி விசாரணை