தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை அருகே பேருந்து நிறுத்தம் அமைத்து 8 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாததால், குடிமகன்கள் குடிப்பதற்கு பார் ஆக பயன்படுத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
நாஞ்சிக்கோட்டை அருகே வல்லம் செல்லும் வழியில் உள்ள மருங்குளம் எனும் ஊரில் பேருந்து நிறுத்தம், கடந்த அதிமுக ஆட்சியின் போது தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக இருந்த திருமதி. அமுதா ரவிச்சந்திரன் மற்றும் அப்பகுதியில் கவுன்சிலராக இருந்த, திருமதி.செல்வி தனபாலன் ஆகியோர்களால் மாவட்ட மாநில நிதிக்குழு மானியத்தால் 2013-2014-ல் 85,000 ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு , 8 ஆண்டுகள் ஆகியும் இன்னும் திறக்கப்படாததால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கட்டி முடிக்கப்பட்டும் பேருந்து நிறுத்தம் பயன்பாட்டுக்கு வராததால் குடிமகன்கள் குடிப்பதற்கு பார் ஆக அதனை பயன்படுத்தி வருகின்றனர். குடித்துவிட்டு பாட்டில்கள் மற்றும் குப்பைகளை அங்கேயே போட்டு விட்டு, சிறுநீர் கழித்தும், இரும்பு நாற்காலிகளை சேதப்படுத்தியும், அந்த இடத்தையே சுகாதார கேடாகவும் மாற்றியுள்ளனர். இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில் புதிதாக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்ட இடத்திலிருந்து 200மீட்டர் தொலைவில் உள்ள கடைகள் இருக்கும் பகுதிகளில் பேருந்தை நிறுத்துவதால் மக்கள் இத்தனை ஆண்டுகளாக வெயில், மழையில் நின்று பேருந்துக்காக காத்திருக்கும் அவல நிலை நீடித்து வருகிறது.
நிற்பதற்கு இடம் இல்லாமல் சாலை ஓரங்களிலே கர்ப்பினி பெண்களும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் உட்பட அனைவரும் நிற்பதால், விபத்துகளும், சல சலப்புகளும் சில முறை ஏற்படுகிறது. இது குறித்து, அதிமுக ஆட்சியில் (2013-2014) லில் அப்பகுதியின் கவுன்சிலராக இருந்த செல்வி தனபாலனிடம் பேசிய போது , “இன்னும் அந்த பேருந்து நிறுத்தத்திற்கு திறப்பு விழா கூட நடைபெறவில்லை, அதை பற்றி என்ன செய்வது என்று தெரியவில்லை, அதை திறப்பதற்கு உண்டான நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் தான் எடுக்க வேண்டும், அதை குடிகாரர்கள் அசிங்கப்படுத்தி வைத்துள்ளார்கள். இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து பேருந்து நிறுத்தத்தை மீண்டும் சுத்தமாக மாற்றி அதனை திறந்து வைத்து அங்கு பேருந்துகள் நிற்க மாவட்ட ஆட்சியரே நடவடிக்கை வழிவகை செய்து தர வேண்டும் என்று கூறினார்.
மக்களின் மனநிலையை அறிய இதை பற்றி கேட்ட போது, பேருந்து நிறுத்தம் இருந்தும் இல்லாத நிலையில் இருப்பது மிகவும் சிரமமாக இருப்பதாகவும், பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டும் பயன்படுத்த முடியாமல் இருப்பது வேதனை அளிக்கிறது என கூறுகின்றனர். சிலர் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார் எனவும் இவர்கள் இனி சரி செய்தாலும், செய்யாமல் போனாலும் இத்தனை ஆண்டுகளாக எங்களை சிரமத்திற்கு உள்ளாக்கியது வருத்தமடைய செய்கிறது என வேதனையுடன் கூறினார்கள்.
காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணம்! சிபிசிஐடி விசாரணை