Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்என்.எல்.சி நிறுவனம் தேவைதானா என அன்புமணி இராமதாஸ் ஏன் கேள்வி கேட்கிறார்? காரணம் இதுதான்!

    என்.எல்.சி நிறுவனம் தேவைதானா என அன்புமணி இராமதாஸ் ஏன் கேள்வி கேட்கிறார்? காரணம் இதுதான்!

    நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன சுரங்கங்களின் விரிவாக்கம், புதிய சுரங்கங்கள் என்ற பெயரில் கடலூர் மாவட்ட மக்களின் நிலங்களை பறிக்கும் என்.எல்.சி நிறுவனத்தின் மனிதநேயமற்ற செயல்கள் தொடர்கின்றன.

    தொழில்மயம் என்ற பெயரில் பூர்வகுடிமக்களின் நிலங்களைப் பறித்து, வாழ்வாதாரங்களை அழித்து, அவர்களை வீடற்ற நாடோடிகளாக மாற்றும் முயற்சியை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என அன்புமணி இராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    மக்கள்தான் மூலதனம் 

    மக்களின் நிலங்களை மூலதனமாக வைத்து என்.எல்.சி நிறுவனம் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், அதற்குக் காரணமான மக்கள் என்.எல்.சி நிறுவனத்தின் பங்குதாரர்களாக இருப்பதற்கு பதிலாக, தொழிலாளர்களாகக் கூட பணியில் சேர முடியாமல், தவித்துக் கொண்டிருக்கின்றனர். 

    என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்து வாழ்வாதாரம் இழந்தோரின் பிரச்சினைகளுக்கே இன்னும் தீர்வு காணப்படாத நிலையில், அடுத்தக்கட்டமாக 49 கிராமங்களில் இருந்து 25,000-க்கும் கூடுதலான ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த என்.எல்.சி நிறுவனம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதையும் அன்புமணி இராமதாஸ் குறிப்பிட்டிருந்தார். 

    என்.எல்.சியின் இழப்பீடு 

    என்.எல்.சி நிறுவனத்திற்காக இதுவரை 37,256 ஏக்கர் நிலம் கொடுத்த சுமார் 25,000 குடும்பங்களுக்கு போதிய இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும் அதுமட்டுமின்றி, 25,000 குடும்பங்களில் 1827 பேருக்கு மட்டும் தான் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது என்றும் அவர்கள் அனைவரும் பல ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்று விட்ட நிலையில், இப்போது ஒப்பந்தத் தொழிலாளர்களாக மட்டும் 3500 பேர் பணியாற்றுகின்ற நிலையையும் அவர் எடுத்துரைத்தார். 

    மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வழங்க முடியாத ஒரு நிறுவனம், நிலக்கரியை வெட்டி எடுத்தாலும், வைரத்தை வெட்டி எடுத்தாலும் அதனால் உள்ளூர் மக்களுக்கு எந்த பயனுமில்லை எனவும், மக்களை வாழ்விக்க வந்த திட்டமாக கருதப்படாது என்றும் வாழ்வாதாரத்தை பறிக்க வந்த திட்டமாகவே பார்க்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 

    என்.எல்.சி வெளியேற வேண்டும்

    மூன்றாவது நிலக்கரி சுரங்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள விளை நிலங்களுக்கு மிகக் குறைந்த தொகையை இழப்பீடாக வழங்கப்படும் என்று என்.எல்.சி அறிவித்துள்ளதை தங்கத்தைப் பறித்துக் கொண்டு, அதற்கு மாற்றாக பித்தளையைத் தருவது போன்றதென விமர்சித்தார், அன்புமணி இராமதாஸ்.

    மூன்றாவது சுரங்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்பதும் இரண்டாம் சுரங்க விரிவாக்கத்திற்காக 25 கிராமங்களில் கையகப்படுத்தப்பட்ட 10,000 ஏக்கர் நிலங்களை திரும்ப ஒப்படைத்து விட்டு என்.எல்.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்பதும் தான் கடலூர் மாவட்ட மக்களின் முழக்கமாக உள்ளது. 

    மேற்கூறிய கூற்றை கூறி இந்த விஷயத்தில் மக்களுக்கு துணையாக இருக்க வேண்டிய தமிழக அரசு, மக்களை கைவிட்டு விட்டு என்.எல்.சி நிறுவனத்திற்கு ,தூதராக நின்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது எனவும் அவர் பதிவுச்செய்தார்.

    நிலத்தடி நீர் 

    “நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தொடங்கப்படுவதற்கு முன் கடலூர் மாவட்டத்தில் 8 அடியில் நிலத்தடி நீர் கிடைத்தது. ஆனால், இப்போது நிலத்தடி நீர் மட்டம் ஆயிரம் அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. நிலத்தடி நீரை உறிஞ்சி கடலுக்கு அனுப்புவதையும், மழைக் காலங்களில் வெள்ளநீரை வெளியில் தள்ளி பயிர்களை மூழ்கடிப்பதையும் என்.எல்.சி. நிறுவனம் செய்து கொண்டிருக்கிறது” என்றும் அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.

    ஆயிரக்கணக்கான கோடிகளை இலாபமாக ஈட்டினாலும், உள்ளூர் மக்களின் நலனுக்காக என்.எல்.சி. எதுவும் செய்வதில்லை. நிறுவனத்தால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வதற்கான திட்டங்களைக் கூட செயல்படுத்துவதில்லை. இப்படிப்பட்டதொரு நிறுவனம் தேவையா? என்பதே மக்களின் கேள்வி என்றும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் உள்ளூர் மக்களின் நலன்களை பாதுகாக்க ஒருபோதும் விரும்பியதில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    நிலக்கரி சுரங்கம் 

    நெய்வேலி முதல் இரு நிலக்கரி சுரங்க விரிவாக்கம்; மூன்றாவது நிலக்கரி சுரங்கம் ஆகியவை குறித்த மக்களின் கோரிக்கைகள், நிலைப்பாடுகளை மத்திய, மாநில அரசுகளுக்கு கொண்டு சென்று தீர்வு காணவும், அதற்காக கடுமையாக போராடவும் பா.ம.க. தயாராக இருக்கிறது என்று அன்புமணி இராமதாஸ் தெரியப்படுத்தினார். 

    என்.எல்.சி நிறுவனத்தால் பாதிக்கப்படும் மக்களைக் காப்பதற்கான இயக்கத்தின் முதல்கட்டமாக பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படக்கூடிய மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கருத்துகளை அறிய முடிவு செய்திருப்பதாகவும் அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார். 

    பா.ம.க.வின் கூட்டம்

    கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதி, கம்மாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவரப்பூர் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    வரும் 27ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 11.00 மணிக்கு இந்தக் கூட்டம்  நடைபெறவிருக்கிறது. அதில் நான் பங்கேற்று மக்களின் கருத்துகளை அறிந்து கொள்ளவிருக்கிறேன் என்றும் அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார். 

    இந்தக் கூட்டத்தில் மக்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை  குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் இந்தக் கூட்டத்தில் பா.ம.க. வின் துணை அமைப்புகள் கலந்து கொள்ளும் எனவும் அறியப்படுகிறது. 

    பொதுமக்களும், வேளாண் பெருங்குடி மக்களும் பெருமளவில் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்வதாகவும் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    இதையும் தெரிஞ்சுக்கோங்க; ‘இதை உறுதிப்படுத்தாமல், சுங்கச்சாவடி அறிவிப்பு மக்களுக்கு பயனளிக்காது’ – அன்புமணி இராமதாஸ்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....