சுங்கச்சாவடிகள் பாமர மக்களை நசுக்கும் ஒன்றாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. அவ்வப்போது சுங்கச்சாவடிகளில் கட்டணம் ஏற்றப்பட்டு மக்களை இன்னலுக்கு உள்ளாக்குதல் நிகழ்வும் அரங்கேறுகிறது. பல இன்னல்கள் சுங்கச்சாவடிகளால் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளன. சாலை பராமரிப்புகளை தனியார் துறையிடம் ஒப்படைத்ததினால்தான் இந்த நிலை. சுங்கச்சாவடிகளை நீக்கக் கோரி தொடர்ந்து வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு வந்தன. குறைந்தப்பட்சம் தற்போதைக்கு சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கைகளை குறைக்க வேண்டும் என்ற முனைப்பில் பல வலியுறுத்தல்கள் சமீப காலமாக நிகழ்த்தப்பட்டு வந்தன.
இப்படியான வேண்டுகோள்களுக்கு பல வருடங்கள் கழித்து ஒரு பதில் கிடைத்திருக்கிறது. ஆம்! தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கி.மீ தொலைவுக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இருப்பது உறுதி செய்யப்படும் என்றும் கூடுதல் சுங்கச்சாவடிகள் இருந்தால் அவையும் அடுத்த 3 மாதங்களில் அகற்றப்படும் என்றும் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு பலரிடத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பு வரவேற்கப்பட வேண்டியது என பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், கேரளத்தில் 60 கி.மீக்கு ஒரு சுங்கச்சாவடி என்ற விதிப்படி சுங்கச்சாவடி எண்ணிக்கை 3 ஆக குறைக்கப்பட்டு விட்டதையும், 2008-ஆம் ஆண்டு விதிகளின்படி தமிழகத்தில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 48-லிருந்து 16 ஆக குறைக்கப்பட வேண்டியதையும், இதை 24.09.21 அன்று தான் வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதோடு, தமிழகத்தைப் பொறுத்தவரையில் தேசிய நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கை 16 ஆக குறைக்கப்பட வேண்டும் என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு என்பது தெரியும் என்றும் அப்படியாக அதே எண்ணிக்கையில் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி இராமதாஸ் அவர்கள் தெரிவித்தார்.
சுங்கச்சாவடிகளை குறைக்கக் கோருவதன் நோக்கம் சுங்கக்கட்டண சுமை குறைய வேண்டும் என்பதை தனது அறிக்கையில் தெரியப்படுத்தி, சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டு, 60 கிமீக்கு ஒரு சுங்கச்சாவடி அமைக்கப்படும் போது, சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டால், அதனால் மக்களுக்கு எந்த பயனும் ஏற்படாது என்றும் சுங்கக்கட்டண கொள்ளை தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகள் மூடப்படும் போது சுங்கக்கட்டணம் உயர்த்தப்படாமல், இப்போதுள்ள சுங்கக்கட்டணமே நீடிப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் இவைதான் சுங்கச்சாவடி சீர்திருத்தத்தின் பயன்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் எனவும் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.