அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் எப்போது என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
திமுக அரசின் மக்கள் விரோத போக்குகளை கண்டித்தும், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் மிக எழுச்சியாக நடைபெற்றது. இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களை ஓ.பன்னீர்செல்வத்தால் நடத்த முடியுமா?
அமைச்சர் பொன்முடி பெண் இனத்தையே அவமானப்படுத்தியுள்ளார். தேர்தலில் இதற்கான தாக்கம் நிச்சயம் இருக்கும். சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் அரசைக் கண்டு பயமில்லை. சட்டப்படி நடவடிக்கை எடுக்க அரசுக்கு திராணி இல்லை.
திமுக அமைச்சர்கள் வானத்தில் இருந்து குதிக்கவில்லை. ஜமீன்தார், குறுநில மன்னர்கள் போல் அவர்கள் செயல்படுகின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் விரைவில் நடைபெறும். அது குறித்து தகவல் தெரிவிக்கப்படும். கட்சி பணிகள் தொடர்ந்து தொய்வு இல்லாமல் நடைபெற்று கொண்டிருக்கின்றது.
இவ்வாறு, அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இதையும் படிங்க : பெட்ரோல் குண்டு வீச்சுகளால் தமிழகத்தில் பதற்றம்; அமித்ஷாவை சந்திக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி