நித்யானந்தாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கு மட்டுமல்ல, அதற்காக பயன்படுத்தப்படும் அனைத்து மருத்துவ இயந்திரங்களுக்கும் கூட கைலாசாவே செலவை ஏற்கும் என இலங்கைக்கு கடிதம் பறந்துள்ளது.
நித்யானந்தாவின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கைலாசாவில் சிகிச்சை அளிக்கத் தேவையான மருத்துவ உள்கட்டமைப்புகள் இல்லாததால், அவசரமாக மருத்துவப் புகலிடம் அளிக்க வேண்டும் என்று நித்யானந்தா தரப்பிலிருந்து இலங்கை அதிபருக்குக் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்திருக்கும் தகவலில் இந்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, இதுவரை தன்னைத் தானே கடவுள் என்று கூறிக் கொண்டிருந்த நித்யானந்தா, தற்போது கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், மிக அவசரமாக அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தை ஸ்ரீகைலாசாவினுடைய வெளிவிவகாரத் துறை அமைச்சர் நித்யபிரேமாத்மா ஆனந்த சுவாமி எழுதியுள்ளார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும், அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
நித்யானந்தா பரமசிவனுக்கு மிக அவசரமாக மருத்துவ உதவித் தேவைப்படுகிறது, அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. கைலாசாவில் இருக்கும் தற்போதைய மருத்துவ வசதிகள் அவருக்கு சிகிச்சையளிக்க போதுமானதாக இல்லை.
அவரது உடல்நிலையில் ஏற்பட்டிருக்கும் மோசமான நிலைக்குக் காரணம் என்ன என்பதைக் கண்டறிய முடியாமல், கைலாசாவிலிருக்கும் மருத்துவர்கள் திணறுகிறார்கள்.
தற்போது கைலாசாவில் இருக்கும் நித்யானந்தாவுக்கு, அங்கிருக்கும் மருத்துவ வசதிகள் போதவில்லை என்பதால் உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது.
எனவே, உடனடியாக கைலாசா நாட்டுடன் தூதரக உறவை ஏற்படுத்தி, நித்யானந்தா, விரைவாக இலங்கைக்கு வர உதவி செய்யுமாறும், நித்யானந்தாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கு மட்டுமல்ல, அதற்காக பயன்படுத்தப்படும் அனைத்து மருத்துவ இயந்திரங்களுக்கும் கூட கைலாசாவே செலவை ஏற்கும். ஏதேனும் மருத்துவ உபகரணங்கள் தேவைப்பட்டால் அதனை வாங்கிக் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்.
எங்களுக்கு சிகிச்சை முடிந்த பிறகு, அதனை உங்கள் நாட்டிலேயே, லட்சோப லட்ச மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அங்கே விட்டுவிட்டு வந்துவிடுவோம் என்றும், திரும்பப் பெற முடியாத அரசியல் புகலிடம் கிடைத்தால், கைலாசா நாடு, இலங்கையில் பெரிய அளவில் முதலீடு செய்யவும் தயாராக உள்ளது.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மே மாதம் நித்தியானந்தா உடல்நலக் குறைவுக் காரணமாக இறந்துவிட்டார் என்று தகவல் காட்டுத்தீபோல பரவியது. ஆனால், சிறிது நாள்களிலேயே “எனக்கு உடல்நிலை சரியில்லை என்பது உண்மை. எனக்கு 27 டாக்டர்கள் மருத்துவம் செய்தும், என்ன பிரச்சனை என்பதைக் கண்டறிய முடியவில்லை. எனக்கு ஞாபகமறதியும் ஏற்பட்டுள்ளது. இவற்றிலிருந்தெல்லாம் விரைவில் மீண்டு வருவேன்” என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பிரதமர் மோடி மற்றும் அதானிக்கு எதிராக நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு பதிவு!