மதவெறுப்பை தூண்டும் அளவிற்கு பல நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பி வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில், மேற்கு வங்க அரசு ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதாவது, மதவெறுப்பை நிகழ்ச்சிகள் மூலம் பரப்பும் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பினை, உடனடியாக நிறுத்தி விடுமாறு கேபிள் ஆப்பரேட்டர்களுக்கு மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதிலும் சாதி மற்றும் மதம் தொடர்பான மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதற்கு, மத வெறுப்பு பேச்சுக்களே காரணமாக கூறப்படுகின்றன. தொலைக்காட்சிகள், யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைதளங்களின் வழியாகவும் மத வெறுப்பு பிரச்சாரங்கள் ஒளிபரப்பப்படுகிறது.
தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்பட்ட விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா. இந்நிகழ்ச்சியில், இவர் இறைத்தூதரான நபிகள் நாயகம் பற்றி அவதூறாகப் பேசினார். அதேபோல, அக்கட்சியைச் சேர்ந்த நவீன் குமார் ஜிண்டாலும், முஹம்மது நபி குறித்து ட்விட்டரில் அவதூறான கருத்தைப் பதிவு செய்தார்.
நுபுர் ஷர்மாவின் இந்த சர்ச்சைக் கருத்து, நாடு முழுவதும் பெரும் பரபரப்புக்கு உள்ளானது. இதனால் ஏற்பட்ட கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, நுபுர் ஷர்மாவை இடைநீக்கம் செய்தது பாஜக. நவீன் ஜிண்டாலை கட்சியிலிருந்தே நீக்கி அதிரடி நடவடிக்கையை எடுத்தது பாஜக. மும்பையில் நுபுர் ஷர்மாவின் மீது, 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் மும்பை காவல்துறை திட்டமிட்டு உள்ளது. இதேபோல டெல்லி மற்றும் கொல்கத்தா காவல் துறையும் நுபுர் சர்மா மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
நுபுர் ஷர்மா கூறிய கருத்தைக் கண்டித்து அரபு நாடுகள், மலேசியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அவதூறாக பேசிய நுபுர் ஷர்மா இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், நாடு முழுவதிலும் அவரை கைது செய்ய வலியுறுத்தி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்திய போது வன்முறை வெடித்தது. குறிப்பாக, மேற்கு வங்கத்தின் ஹவுரா பகுதியில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, இந்து அமைப்பினர் உள்ளே புகுந்து தாக்கியதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் உருவானது. இதனால் காவல் துறையினர் தடியடி நடத்தினர்.
இதுகுறித்து, வட இந்திய ஆங்கில மற்றும் இந்தி ஊடகங்கள், மேற்கு வங்க அரசை குற்றம் சாட்டும் விதமாக, தவறான செய்திகளை வெளியிட்டதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.
இந்நிலையில் வெறுப்பு பிரச்சாரங்களுக்கு இடமளிக்கும் தொலைக்காட்சிக்கு, மேற்கு வங்க அரசு கடிவாளம் போட்டுள்ளது. அதாவது, மதவெறுப்பை பரப்பும் வகையில், பரபரப்பான மற்றும் முற்றிலும் தவறான தகவல்களை கொண்ட நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பினால், உடனடியாக ஒளிபரப்பை நிறுத்துமாறு கேபிள் ஆபரேட்டர்களுக்கு மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுமண தம்பதிகள் வெட்டிக் கொலை: கும்பகோணத்தில் பரபரப்பு!