உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில், கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பல மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அமர்வு முன்பு மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு வந்தன. மேலும் இரு தரப்பினரும் எழுத்துப்பூர்வ விளக்கங்களையும் தாக்கல் செய்தனர். இதையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பை தள்ளிவைத்தது.
இந்நிலையில், இன்று அதற்காக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் எனவும், கட்சியின் இடைகாலப் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்வதாகவும், ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வந்திருக்கும் சூழலில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரிடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தத் தீர்ப்பு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம், உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.
இந்த தீர்ப்பு குறித்து வைத்திலிங்கம், அதிமுக பொதுக்குழுவை கூட்டியது தான் செல்லும் என உச்சநீதிமன்றம் கூறி இருப்பதாகவும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சொல்லவில்லை எனவும் அதனால், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக, தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகவும் தெரிவித்தார்.
கொரனோ அச்சம் – மூன்று ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே இருந்த தாயும் மகனும்..