சென்னையில் பின்னணி குரல் கொடுக்கும் பெண் கலைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் தன்னுடன் பழகி, காதலித்து மோசடி செய்த விக்ரம் வேதகிரி என்பவரைப் பற்றிக் காவல் துறையில் கொடுத்த புகார் ஒன்று பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
பின்னணி குரல் கொடுக்கும் பணியினைச் செய்து வரும் அந்த பெண், சென்னையிலுள்ள திருநின்றவூரில் வசித்து வருகிறார். திருமணமான அவர், 2016ம் ஆண்டு தனது கணவனுடன் விவாகரத்தாகி தனியாக வசித்து வந்துள்ளார்.
விக்ரம் வேதகிரியுடனான அறிமுகம்..
2020ம் ஆண்டு விக்ரம் வேதகிரி என்னும் நபர் முகநூலின் மூலம் அறிமுகமாகியுள்ளார். அறிமுகமானபிறகு வேலை விஷயங்களைப் பற்றி பேசத்தொடங்கிய அவர்கள், பிறகு சொந்த விஷயங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
பெண் கலைஞருக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்பதனை தெரிந்து கொண்ட பிறகு விக்ரம் வேதகிரி அவரிடம் நெருக்கம் காட்டத் தொடங்கியுள்ளார். 2021ம் ஆண்டு நேரில் சந்திக்கத் தொடங்கிய விக்ரம், அவரிடம் தனது காதலைத் தெரிவித்துள்ளார்.
முதலில் அவரது காதலை மறுத்தாலும் அதற்குப் பிறகு ஒப்புக்கொண்டதாக தனது வாக்குமூலத்தில் பதிவு செய்துள்ள பெண் கலைஞர், தனது சம்மதத்தினை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, தனது குடும்பத்தாரிடம் அறிமுகம் செய்து வைத்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ரகசியத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறியுள்ளார்.
இந்த ரகசியத் திருமணத்திற்கு தனது வீட்டில் ஒப்புக்கொள்ளாததால் கோபித்துக் கொண்டு தனது வீட்டிலேயே தங்கி கொண்டதாகவும் தெரிவித்த அந்த பெண் கலைஞர், விரைவில் அனைவரும் அறியும்படி திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல முறை தன்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டதாகக் கூறியுள்ளார்.
பிரச்சனைகள்..
கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாததால் ஏமாற்றமடைந்த பெண் கலைஞர், விக்ரம் வேதகிரியிடம் தனது கோபத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
நிச்சயதார்த்தம் வரை சென்ற பிறகும் திருமணத்திற்கு விக்ரம் வேதகிரி காலம் தாழ்த்தி வந்தது மட்டுமல்லாமல் உடலுறவில் மட்டுமே ஈடுபாடு காட்டி வந்த விக்ரம் வேதகிரி மீது நாளடைவில் பெண் கலைஞருக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது.
தனது இச்சைக்காக நாளடைவில் அந்த பெண் கலைஞரைத் துன்புறுத்தவும் தொடங்கியுள்ளார் விக்ரம் வேதகிரி.
இந்த கொடுமைகளைத் தங்கிக்கொள்ள முடியாமல் காவல் நிலையத்திற்குச் சென்றபோது தன்னை மன்னித்து விடும்படியும், இனி இது போன்ற நிகழ்வுகள் நடக்காது என்றும் விக்ரம் கேட்டுக்கொண்டதால் புகாரளிக்கும் முயற்சியினைக் கைவிட்டதாக அந்த பெண் கலைஞர் கூறியுள்ளார்.
சில நாட்களுக்குப் பிறகு விக்ரம் வேதகிரி தலைமறைவாகிவிட, தனது வீட்டில் அவர் விட்டுச் சென்ற உடைந்த செல்போன் ஒன்றினை சரி செய்து பார்த்த போது அந்தப் பெண் கலைஞருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
சிக்கிய தரவுகள்..
சரி செய்த விக்ரம் வேதகிரியின் செல்போனில், பல ஆபாச புகைப்படங்களும், பல பெண்களுடன் தொடர்பில் இருந்த காணொளிகளும் இருப்பதினைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெண் கலைஞர் உடனடியாகக் காவல் நிலையத்திற்குச் சென்று விக்ரம் வேதகிரி மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.
சொந்த உறவுகளைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் ஆபாசக் கதைகள், மீம்கள் என விக்ரம் வேதகிரி தயார் செய்து வைத்துள்ளதினைப் பார்த்த பிறகே அவரது சுயரூபம் தெரிந்தது எனவும்,
தன்னைப் போல பல பெண்களை மாயவலையில் சிக்க வைத்து விக்ரம் ஏமாற்றியுள்ளார் எனவும் பெண் கலைஞர் கூறியுள்ளார்.மேலும், நாளை வேறு ஒரு பெண்ணுடன் விக்கிரமிற்கு திருமணம் நிச்சயமாகியுள்ளதாகவும், இந்த திருமணத்தினை தடுத்து நிறுத்தி அந்த பெண்ணின் வாழ்க்கையினை காப்பற்றுமாறும் பெண் கலைஞர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரினை ஏற்ற காவல் துறையினர், இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளான 417 -ஏமாற்றுதல்
420-மோசடி
406-நம்பிக்கை மோசடி
354(ஏ)-பாலியல் வன்கொடுமை
354-வன்முறையால் பெண்ணை மானபங்கப்படுத்துதல்
506(2)-கொலை மிரட்டல் மற்றும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கினைப் பதிவு செய்து விக்ரம் வேதகிரியைக் கைது செய்துள்ளனர்.
குடும்பச் சூழ்நிலை காரணமாக மன அழுத்தத்தில் இருக்கும் பெண்கள், விவகரத்தாகி தனியாக வாழ்ந்து வரும் பெண்களைக் குறிவைத்து தனது ஆசை வார்த்தைகளைக் கூறி ஏமாற்றியுள்ள விக்ரம் வேதகிரியின் செயலானது பெரும் அதிர்ச்சியலைகளை உருவாக்கி வருகிறது.
தமிழக பள்ளிகளில் இவ்வளவு காலியிடங்களா? ; புள்ளி விவரங்களுடன் அன்புமணி ராமதாஸ் அறிக்கை!