தன்னுடைய ஹோட்டல் அறையைப் படமெடுத்து சமூகவளைத்தளத்தில் வெளியிட்ட ரசிகருக்கு விராட் கோலி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி விளையாடி வருகிறார். இதுவரையில் இந்திய அணி இரு வெற்றிகளையும், ஒரு தோல்வியையும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சந்தித்துள்ளது. இதையடுத்து நவம்பர் 2-ம் தேதி நடைபெற உள்ள ஆட்டத்தில் வங்காளதேச அணிக்கு எதிராக இந்திய அணி களம்காணவுள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் விராட் கோலி தங்கிய ஹோட்டல் அறையில் எடுக்கப்பட்ட காணொளியை ரசிகர் ஒருவர் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த செயலுக்கு விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கோலி தெரிவித்துள்ளதாவது;
ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த வீரர்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைவதை புரிந்துகொள்ள முடிகிறது. ரசிகர்கள், வீரர்களைச் சந்திக்க ஆர்வம் கொள்வதை நான் எப்போதும் வரவேற்றுள்ளேன். ஆனால், இந்தக் காணொளி என்னை பயப்பட வைக்கிறது. என்னுடைய தனியுரிமை குறித்து அச்சம் ஏற்படுகிறது. என்னுடைய ஹோட்டல் அறையில் எனக்குத் தனியுரிமை இல்லையென்றால் எனக்கான வெளியை எங்குக் கண்டடைவது? இதுபோன்ற வெறித்தனம் எனக்கு ஏற்புடையதல்ல. என்னுடைய தனியுரிமை மீதான தாக்குதல் இது. மக்களின் தனியுரிமையை மதியுங்கள். அவர்களைப் பொழுதுபோக்குப் பண்டமாகப் பார்க்க வேண்டாம்.
இவ்வாறு விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, கோலியின் மனைவியும் பிரபல நடிகையுமான அனுஷ்கா சர்மா, ரசிகர்கள் மனிதாபிமானமின்றி நடந்துகொண்ட சில சம்பவங்கள் உண்டு. ஆனால் இது மிகவும் மோசமானது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தந்தையை கொல்ல 3 லட்சம், தாயுடன் கொன்றால் 5 லட்சம்! கூலிப்படையிடம் பேரம் பேசிய கொடூர மகன்