இந்தியன்-2 படப்பிடிப்பில் இயக்குநர் சங்கரின் செயல்கள் குறித்து இயக்குநர் வசந்தபாலன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வெயில், அங்காடித் தெரு, அரவான் மற்றும் காவியத்தலைவன் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் வசந்த பாலன். அர்ஜுன் தாஸ், துஷரா விஜயன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள அநீதி படத்தை தற்போது இவர் இயக்கியுள்ளார். மேலும், இப்படத்தை இயக்குநர் சங்கர் இயக்கியுள்ளார்.
இந்நிலையில், கமல்ஹாசன் நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இந்தியன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு வசந்த பாலன் சென்றுள்ளார். அப்போது, படப்பிடிப்பில் நிகழ்ந்தவற்றை வசந்த பாலன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இயக்குநர் இருக்கையிலிருந்து கேமராவை நோக்கி, நடிகர்களை நோக்கி, துணை நடிகர்களின் ஒழுங்கை சரி செய்ய ஆயிரம் முறை காலை 7 மணியிலிருந்து மாலை 6 மணி வரை ஓடி ஓடி தீராதக் காட்சி ஓவியங்களை வரைந்தவண்ணம் இருக்கிறார்.
காட்சி எழுதப்பட்ட அந்த எழுதட்டையில் அந்த காட்சிக்கான கேமராக் கோணங்கள் பென்சிலால் ஒரு தொழிற்நுட்ப பொறியாளரின் வரைக்கோட்டு சித்திரம் போல வரையப்பட்டிருக்கிறது. அந்த சித்திரங்களுக்கு உயிர் கொடுக்கவே வெயில், புழுதி, நெருப்பு, புகை, உணவு, குடிநீர் என எதையும் கண்டு கொள்ளாது ஒரு வெறி கொண்ட சிங்கம் போல படப்பிடிப்புத் தளத்தில் ஆங்காங்கே உறுமியபடி திரிகிறார்.
சிங்கத்தின் அசைவுகளை அருகே இருந்து ரசிக்க ஒரு தருணம் கிடைத்தது. பொன் தருணம். அவர் கண்களில் இன்று புத்தம் புதியதாய் பிறந்த குழந்தையின் ஆர்வமும் மினுமினுப்பும் ஆச்சரியமும் சிரிப்பும் கலந்திருக்கிறது. அவரின் வெற்றியின் ரகசியம் அது தானோ….ஒரு காட்சித்துணுக்கு நன்றாக வரும் போது மைக்கில் படப்பிடிப்பு தளத்தில் நடித்த அனைவரையும் பாராட்டுகிறார்…அரங்கம் கைதட்டி அதிர்கிறது…மாஸ்டர் பாராட்டும் போது அதை விட ஆடுகளத்திற்கு வேறு என்ன பேரானந்தம்.
சூரியன் வேறு ஆடை பூண்டு மாலையை மணக்கும் போது மீண்டும் கேப்டனின் குரல் இன்றைய நாளின் படப்பிடிப்பிற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி என கூறும் போது படப்பிடிப்பு தளமெங்கும் சோர்வு மறைந்து நேர்மறை எண்ணங்கள் மின்மினி பூச்சி போல திசையெங்கும் ஒளிவெள்ளமாய் பரவுகிறது.
படப்பிடிப்பு முடிந்து அனைவரும் கூடடைந்த பிறகும் படப்பிடிப்பு தளத்தில் அடுத்த நாள் காட்சிக்கான தயாரிப்பு வேலைகளை ஒரு உருவம் தனி ஒருவனாய் செய்தவண்ணம் இருக்கிறது. இரவு நீள்கிறது.
இந்தியாவின் பெருமைமிக்க இயக்குநராக இருப்பதற்காக அத்தனை தன்மைகளையும் பெருமைகளையும் திறமைகளையும் தன்னுள் கொண்ட இயக்குநர் சங்கர் தான் அவர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இயக்குநர் சங்கரிடம் வசந்த பாலன் துணை இயக்குநராக பணி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான்-வங்கதேசம் நடுவில் ‘இந்தியா’ என பெயர் சூட்டி மகிழும் தம்பதி