ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரான திருமகன் ஈ.வெ.ரா கடந்த 4 ஆம் தேதி உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தத் தொகுதி காலியானதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 18 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இன்று ஜனவரி 31 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இன்று முதல் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய பிப்ரவரி 7 ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து வருகிற 8 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் மீதான பரிசீலனை நடைபெறும். அதைத்தொடர்ந்து வருகிற பிப்ரவரி 10 ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும். மேலும் அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். மேலும் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வருகிற 3 ஆம் தேதியும், தேமுதிக வேட்பாளர் எஸ் ஆனந்த் 1 ஆம் தேதியும், அமமுக வேட்பாளர் சிவாபிரசாந்த் 3 ஆம் தேதியும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்.
அதைத்தொடர்ந்து பிப்ரவரி 27 ஆம் தேதி வாக்குப்பதிவும், அடுத்து மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.
பரோட்டோ சாப்பிட்ட சென்னை இளைஞர் பலி