நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், செர்பிய டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச் பங்கேற்கவில்லை.
அமெரிக்கா வரும் வெளிநாட்டவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அமெரிக்க அரசு அறிவித்திருக்கிறது. ஆரம்பம் முதலே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பாத ஜோகோவிச், தற்போதும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பவில்லை.
எனவே, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தால் யுஎஸ் ஓபன் போட்டியில் தன்னால் பங்கேற்க இயலாது என அவர் வியாழக்கிழமை அறிவித்தார்.
இதனிடையே, தடுப்பூசி விதிமுறையானது அரசின் முடிவு எனவும், போட்டியில் பங்கேற்போருக்கு தடுப்பூசி கட்டாயம் இல்லை எனவும் அமெரிக்க டென்னிஸ் சங்கம் அறிவித்திருக்கிறது. இதனால், அமெரிக்காவில் நுழைவதற்காக வெளிநாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு மட்டுமே தடுப்பூசி கட்டாயமாகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அமெரிக்க வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்பதற்கு தடையேதுமில்லை.
முன்னதாக, கொரோனா தடுப்பூசி விவகாரத்தால், ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச்சால் பங்கேற்க முடியாமல் போனது. பின்னர் பிரெஞ்சு ஓபனில் களம் கண்ட அவர், அதில் காலிறுதியில் நடாலிடம் தோற்றார். பின்னர், விம்பிள்டன் சாம்பியன்ஷிப்பில் வாகை சூடினார். கடந்த சீசன் யுஎஸ் ஓபனில், ஜோகோவிச்சை வீழ்த்தியே ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது.
ஜோகோவிச் தற்போது 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன், ஓபன் எராவில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற 2-ஆவது வீரராக இருக்கிறார். முதலிடத்தில், 22 பட்டங்களுடன் நடால் இருக்கிறார்.
குறுவட்ட விளையாட்டு போட்டி.. ஆர்வத்துடன் பங்கேற்கும் மாணவர்கள்