உத்தர பிரதேசத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டை அகற்றியதன் காரணமாக தாயும் மகளும் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், மாதௌலி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து வீட்டைக் கட்டி இருப்பதாக அதே பகுதியைச் சேர்ந்த விஷால் தீட்சித் என்பவர் புகார் அளித்தார். இதன் காரணமாக மவூ மாவட்டத்தின் துணை ஆட்சியர் ஞானேஸ்வர் பிரசாத் தலைமையில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற அந்த கிராமத்துக்கு பிப்ரவரி 13 ஆம் தேதி சென்றனர்.
அப்போது ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீட்டை இடிக்கும் முயற்சியை அதிகாரிகள் தொடங்கினர். இதனால் மனமுடைந்த பிரமிளா தீட்சித் (45) என்ற பெண்ணும் அவரது மகள் நேஹா தீட்சித் (20) என்ற பெண்ணும் தங்களின் உடலுக்கு தீ வைத்துக் கொண்டனர். மேலும் இவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் தீயை அணைக்க முயன்ற உள்ளூர் காவல் நிலைய அதிகாரி தினேஷ் கவுதம் மற்றும் பிரமிளாவின் கணவர் ஜென்டன் லால் ஆகிய இருவருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன.
மேலும் இந்த விவகாரத்தில் அம்மாநில பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கடுமையாகி சாடியது. மேலும் குற்றம் செய்வதவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு உரிய நீதியைப் பெற்று தர வேண்டும் என்றும் காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில், அலட்சியமாக செயல்பட்ட பொதுமக்களின் தற்கொலைகளுக்கு காரணமானவர்களாக கருதப்படும் துணை ஆட்சியர் ஞானேஸ்வர் பிரசாத், காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் என 39 அரசு அலுவலர்கள் மீது கொலை வழக்கு உள்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, இறந்தவர்களின் உடல்களை தரமறுக்கும் கிராம மக்கள், முதல்வர் நேரடியாக வந்து பார்வையிட வேண்டும் என்றும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் போராடி வருகின்றனர்.
‘பா.ரஞ்சித் என் பேஸ்புக் நண்பர்’ – இயக்குநர் மோகன்.ஜி பேச்சு!