எலான் மஸ்க்கிற்கு ட்விட்டரை முழுமையாக கையகப்படுத்துவதற்கு பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கடந்த மே மாதம் மிகவும் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ..3.30 லட்சம் கோடி) வாங்குவதற்காக ட்விட்டர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தார்.
அதன்பின்னர், போலி கணக்குகள் மற்றும் ஸ்பேம் (Spam) குறித்த முழுமையான கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார். அதுவரையில் ட்விட்டருடனான தனது ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.
இரண்டு மாதங்களாகியும், ட்விட்டர் நிறுவனம் போலி கணக்குகள் குறித்து எந்த விவரங்களையும் தராததால் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் கடந்த ஜூலை 10-ம் தேதி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, எலான் மஸ்க் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கியுள்ளதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது. மேலும், ஒப்பந்தத்தின்படி அவர் நிறுவனத்தை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று ட்விட்டரின் வாரியத் தலைவர் பிரட் டெய்லர் தெரிவித்தார்.
மேலும், எலான் மஸ்குக்கு ட்விட்டர் நிறுவனத்தை விற்பது தொடர்பாக தன் பங்குதாரர்களிடையே பொது வாக்கெடுப்பை நடத்த அந்நிறுவனம் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், எலான் மஸ்க்கிற்கு ட்விட்டரை ரூ.3.50 லட்சம் கோடிக்கு முழுமையாக கையகப்படுத்துவதற்கு பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.