உணவகத்திற்கு பெரியார் பெயர் வைக்கப்பட்டதற்காக, உணவகத்தின் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணி அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை காரமடை அருகே உள்ள பகுதிதான், கண்ணார்பாளையம். இப்பகுதியில் பிரபாகரன் என்பவர் ஓர் உணவகத்தை புதியதாக அமைத்துள்ளார். அந்த உணவகத்திற்கு பிரபாகரன் ‘தந்தை பெரியார் உணவகம்’ எனப் பெயரிட்டுள்ளார். மேலும், பெயர் பலகையில் பெரியாரின் புகைப்படத்தையும் அவர் வைத்திருந்தார்.
இந்த புதிய ‘தந்தை பெரியார் உணவகம்’ நேற்று திறப்பு விழா காண இருந்தது. ஆகவே, கடை உரிமையாளர் பிரபாகரன் ,அவரது நண்பர்கள் மற்றும் ஊழியர்களுடன் தீவிரமாக திறப்பு விழா பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
இதையும் படிங்க: காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் – தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்
அச்சமயத்தில், அங்கு வந்த ஒரு கும்பல் பெரியார் பெயரில் உணவகம் திறந்தது குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. பிரபாகரனுடன் அந்த கும்பலில் இருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பிரபாகரன் மற்றும் அவரது ஊழியர்களை தகாத வார்த்தைகளில் திட்டி தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் ‘தந்தை பெரியார் உணவகம்’ ஊழியர் அருண் என்பவர் காயமடைந்துள்ளார். இதைத் தொடர்ந்து, பிரபாகரன் காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த ஆறு பேரைக் கைதுசெய்திருக்கின்றனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு பெரியாரிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.