தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, அதிமுக கட்சி இரண்டாகப் பிரிந்தது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரு வேறு தரப்புகளாக பிரிந்து, அடுத்த சில மாதங்களில் ஒன்றிணைந்தனர். இருப்பினும், உள்கட்சி மோதல்கள் இருந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், சிறைக்கு சென்று திரும்பிய சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவரும் அதிமுகவில் இணைய முயற்சித்தனர். ஆனால், இவர்களின் ஆசை நிறைவேறவில்லை. டிடிவி தினகரன் மட்டும் அமமுக என்று தனிக்கட்சி ஆரம்பித்து விட்டார்.
இந்நிலையில், அதிமுகவை மீட்டெடுக்கும் முயற்சியில் சசிகலாவின் பாதையும், அமமுகவின் பாதையும் வேறு வேறானவை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக கட்சியை மீட்டெடுக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஈரோடு வந்தார் அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். அப்போது செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அவர் பேசுகையில், அமமுகவின் மிக முக்கிய இலக்கு அதிமுகவை மீட்டெடுப்பது மட்டும் தான்.
இதற்கான பயணத்தை நாங்கள் தொடர்ந்து நடத்தி வருவதுடன், அதை நோக்கி தான் எங்களின் செயல்பாடுகள் இருக்கிறது. மூச்சு விடும் வரை அதற்காக போராடுவேன். கட்சியிலிருந்து வெளியே செல்லும் நபர்கள், சொந்த காரணங்களுக்காகவும், சுயநலத்திற்காகவும் செல்கின்றனர். அவர்களுக்காக நான் இந்த கட்சியை உருவாக்கவில்லை.
சசிகலாவின் இலக்கும், எங்களது இலக்கும் ஒன்று தான். ஆனால், சசிகலா அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக நீதிமன்றத்தில் போராடி வருகிறார். நாங்கள் ஜனநாயக ரீதியாக மக்களை சந்தித்து, அதிமுக கட்சியை மீட்டெடுக்க அமமுக கட்சியை துவக்கினோம்.
மேலும், இரட்டை இலை சின்னத்தைப் பெற போராடி வருவதாகவும், நிச்சயம் இலக்கினை அடைவோம் என்றும் அவர் கூறினார். சசிகலாவின் பாதை வேறு, எங்களது பாதை வேறு. மடியில் கணம் இருப்பதால் தான் அதிமுகவினர் மக்கள் பிரச்சனைகளை பேசத் தயங்கி வருகின்றனர் என டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டினார்.
சாதி விட்டு சாதி திருமணம்; தீர்ப்பு வந்த கண்ணகி மற்றும் முருகேசன் ஆணவக்கொலை வழக்கு!