மதுக்கரை நீதிமன்றத்தில் சரணடைந்த டிடிஎப் வாசன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் யூடியூபர்களுள் ஒருவர்தான், டிடிஎப் வாசன். இரு சக்கர வாகனம் குறித்த காணொலியின் மூலம் மிகவும் பிரபலமானார்.
டிடிஎப் வாசன் சில தினங்களுக்கு முன்பு டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவை தனது இருசக்கர வாகனத்தில் அமர வைத்து சாகசம் செய்திருந்தார். அந்த காணொலியை டிடிஎப் வாசன் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இந்த காணொலி சமூகவலைதளத்தில் வைரலானது.
இந்த காணொலியை கொண்டு கோவை காவல்துறை டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்தது. இதுதொடர்பாக கோவை மாநகர காவல்துறை
இதையும் படிங்க: ‘வாரிசு’ படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை சந்தித்த விஜய் – இணையத்தில் வைரலாகும் வீடியோ
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
“டிடிஎப் வாசன் என்ற நபர் அவரது இரு சக்கர வாகனத்தில் யூடியூபர் ஜி.பி.முத்து என்பவரை பின்சீட்டில் அமர வைத்து கோவை மாநகரம், டி3 போத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலக்காடு மெயின் ரோடு, எம்டிஎஸ் பேக்கிரி அருகே அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் விதமாகவும் வாகனத்தை ஓட்டி அதை பதிவு செய்து அவரது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக போத்தனுர் காவல்நிலையத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், போத்தனூர் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக டிடிஎப் வாசன் மதுக்கரை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் காலை 10.30 மணிக்கு சரணடைந்தார். இதையடுத்து, அன்று மாலை 5.30 மணி வரை நீதிமன்ற கூண்டில் டிடிஎப் வாசன் அமரவைக்கப்பட்டிருந்தார். இதன்பின்னர், இரண்டு நபர்கள் உத்தரவாதம் அளித்த பின் அவர் அன்றே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.