துர்கா பூஜைக்கு முன்பாக சந்தைகளில் இன்னும் சில டிசைன்களுடன் அமித்ஷாவை விமர்சிக்கும் டீ-சர்ட் வந்துவிடும் என திரிணாமூல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரைன் தெரிவித்துள்ளார்.
பாஜக-வை வீழ்த்துவதில் பெரும் முனைப்புடன் இயங்கி வருகிறது திரிணாமூல் காங்கிரஸ். மம்தா பானர்ஜியின் செயல்பாடுகளும் இதற்கான தீவிரத் தன்மையை காட்டுகிறது.
இந்நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரைன் அணிந்த ஒரு டிசர்ட் சமூகவலைதளத்திலும், அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெரிக் ஓ பிரைன் அணிந்திருந்த டி சர்ட்டில், பாஜக-வின் மூத்த தலைவர் அமித்ஷாவின் படம் இடம் பெற்றிருந்தது. படத்தை ஒட்டி, இந்தியாவின் ‘மிகப்பெரிய பப்பு’ என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது.
இதைத் தொடர்ந்து, மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி கூட அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகிவிட்டு வந்த போது, ‘அமித்ஷாவை இந்தியாவின் மிகப்பெரிய பப்பு’ என்று விமர்சித்து இருந்தார். தற்போது இந்த விமர்சன வாசகத்தை டி ஷர்ட்டில் அடித்து டிரெண்ட் ஆக்க தொடங்கியிருக்கிறது திரிணாமூல் காங்கிரஸ்.
இது குறித்து டெரிக் ஓ பிரைன் கூறும்போது, இந்த டி சர்ட்டுகள் துர்கா பூஜைக்கு முன்பாக சந்தைகளில் இன்னும் சில டிசைன்களுடன் வந்துவிடும் என்று தெரிவித்துள்ளார். இது மேலும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.