கும்பகோணம் அருகே சுகாதார பணி மற்றும் தூய்மை பணியில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்களே, செவிலியர் பணியை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள அண்ணலக்ரஹாரம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட வீரவாஞ்சி நாதன் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நேற்று மாலை பரிசோதனை செய்து ,
அம்மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
அப்போது செவிலியருக்கு பதிலாக, மருத்துவமனையில் சுகாதார மற்றும் தூய்மை பணியில் ஈடுபடும் ஒப்பந்த பணியாளர்களில் ஒருவரான பெண் பணியாளர் அவருக்கு டிரிப்ஸ் போட்டுள்ளார். பின்னர் டிரிப்ஸ் முடிந்து அடுத்த பாட்டிலை மற்ற வேறு ஒரு ஆண் ஒப்பந்த பணியாளர் வந்த போது அவரால் டிரிப்ஸ்சை சரியாக லாக் செய்ய முடியவில்லை.
இதனால் நோயாளி சக்திவேலின் ரத்தம் உடலில் இருந்து டிரிப்ஸ் மூலம் வெளியேறுவது கண்டு அதிர்ச்சியடைந்து உறவினர்கள் சப்தமிட்டுள்ளனர். மேலும், இதனை அருகில் இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். சக்திவேல் இந்நிகழ்வுக்குப் பின்பு சிகிச்சை எடுக்க வேறு மருத்துவமனைக்கு சென்றுவிட்டார்.
இந்த காணொளி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சுகாதார பணி மற்றும் தூய்மை பணியில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்களே, செவிலியர் பணியை ஆபத்தான முறையில் மேற்கொள்வது சக நோயாளிளையும், பொது மக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உடனடியாக சுகாதாரப்பணிகள் உயர் அலுவலர்கள் மற்றும் தஞ்சை மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.