தங்கள் விளைநிலங்களை சட்டவிரோதமாக கிரானைட் சுரங்கங்களுக்காக அபகரித்துக்கொண்டதாக ஆந்திர மாநில பழங்குடியின பெண்கள் சேலையில் தூக்கு போட்டு போராட்டம் நடத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் அனகபள்ளி மாவட்டம் முதுகுலா மண்டலத்தில் உள்ள உரவக்கொண்டா பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் முந்திரி பயிர்செய்து வருகின்றனர். இங்கு சுரங்கம் வேலை செய்ய கிரானைட் நிறுவனம் ஒன்றுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து எங்களுக்கு எந்தவித தகவல்களையும் தரவில்லை எனவும் கூறுகின்றனர் பழங்குடியினர்.
இவர்கள் சேலையை தூக்கு கயிறாக கழுத்தில் போட்டு வீடியோ எடுத்ததில் கூறியது என்னவென்றால், “எங்களின் கோரிக்கையை ஏற்காவிட்டால் நாங்கள் தூக்கு மாட்டி சாவதைத் தவிர வேறு வழியில்லை. முந்திரி தோட்டத்தை நம்பிதான் எங்களின் வாழ்க்கை உள்ளது. இது இல்லை என்றால் பிழைக்க வேறு வழி இல்லை. எங்களிடம் கிரானைட் நிறுவனம் பணம் ஏதும் தரவில்லை. நிலத்திற்கான ஆவணங்கள் என்று எதுவும் எங்களிடம் இல்லை. அரசுதான் இந்த இடங்களில் பயிர் செய்ய அனுமதி அளித்தது.”
மேலும், “ இப்போது ஜேசிபி இயந்திரத்தின் மூலம் எங்களின் விளைநிலங்களை அழிக்க நினைக்கிறார்கள். முதுகுலா மண்டலத்தின் வருவாய் அதிகாரிகள் எங்கள் மீது பொய்ப்புகார் கூறுகின்றனர். இந்த கிரானைட் நிறுவனம் விளைநிலங்களை அழித்து சாலை அமைக்க பார்க்கிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி தீர்வுக்காண வேண்டும். வருகின்ற ஏப்ரல் 11 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்” எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அரசு அலுவலர்கள் தரப்பில் எந்தவித கருத்துக்களும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.