இந்த 15 ஆவது ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளிலேயே மிகவும் விறுவிறுப்பானதாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருந்த போட்டி எதுவென்றால்? குஜராத் டைட்டன்ஸ்க்கும், பஞ்சாப் கிங்ஸ்க்கும் இடையே நடைபெற்ற 16 ஆவது போட்டிதான்.
முதல் இன்னிங்ஸ்
இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியானது முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்கில் களமிறங்கியது. பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வாலும், தவானும் தொடக்க வீரர்களாக ஆட்டத்தை ஆரம்பித்தனர்.
மயங்க் அகர்வால், ஜானி பேர்ஸ்டோ போன்றோர் வந்த வேகம் தெரியாமல் ஒற்றை இலக்க ரனகளில் வெளியேறினர். குஜராத் பந்துவீச்சை தாக்குப்பிடித்த தவான் 30 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். லிவிங்ஸ்டோன் அதிரடியாக விளையாடி 27 பந்துகளுக்கே 64 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோருக்கு அஸ்திவாரம் போட்டார்.
ஜித்தேஷ் சர்மா – 22, ஷாருக்கான்- 15, ராகுல் சஹார்- 22 என ரன்கள் அடிக்க பஞ்சாப் அணியானது இருபது ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது. குஜராத் அணித்தரப்பில் ரஷித்கான் மூன்று விக்கெட்டுகளையும், தர்ஷன் நல்காண்டே இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்தார்.
இரண்டாம் இன்னிங்ஸ்
190 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களமிறங்கியது. குஜராத் அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக மேத்யூ வேட் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினார். மேத்யூ வேட் 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, அடுத்ததாக சாய் சுதர்ஷன் களமிறங்கினார். நிதானமாக விளையாடிய சாய் 30 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இரு விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும், மறுபுறம் சுப்மன் கில் நிலைத்து விளையாடி பஞ்சாப் அணியின் பந்துவீச்சைத் துவம்சம் செய்துக்கொண்டிருந்தார். 11 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் விளாசிய சுப்மன் கில் சதமடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் 96 ரன்கள் எடுத்திருந்த போது ரபாடா வீசிய 18 ஆவது ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். சுப்மன் கில் சதம் அடிக்காதது பலரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. இன்னோருபுறம் யார் பக்கம் வெற்றி செல்லும் என்ற சூழலும் ஆட்டத்தில் நிலவியது.
இருபதாவது ஓவர்
19 ஆவது ஓவரின் முடிவில் குஜராத் அணியானது, 171 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆட்டக்களத்தில் ஹர்திக் பாண்டியாவும், மில்லரும் இருந்தனர். ஒரு ஓவருக்கு 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழல் ஆட்டத்தில் நிலவியது.
இப்படியாக சூழல் இருக்க இருபதாவது ஓவரை வீச வந்தார், ஓடின் ஸ்மித். இருபதாவது ஓவரின் முதல் பந்தை அகலப்பந்தாக ஒடின் வீச, அதற்கான மறுபந்தில் ஹர்திக் பாண்டியா ரன் அவுட் ஆக குஜராத் அணி அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இப்போது 5 பந்துகளுக்கு 18 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலைக்கு குஜராத் அணி தள்ளப்பட்டது. ஆட்டக்களத்திற்குள் மில்லருடன் ஜோடி சேர திவாட்டியா வந்தார்.
இரண்டாவது பந்தில், திவாட்டியா ஒரு ரன் எடுக்க, பேட்டிங் முனைக்கு மில்லர் வந்தார். ஓவரின் மூன்றாவது பந்தை பவுண்டரிக்கு அனுப்பி, ஆட்டம் இன்னும் முடியவில்லை என்றார், மில்லர். இப்போது மூன்று பந்துக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மில்லரால் ஒரு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
ஏறத்தாழ அனைவரும், பஞ்சாப் அணிதான் வெற்றி என்ற எண்ணத்தை தங்களுக்குள் வரவழைத்துவிட்டனர். ஆம்! சூழலும் அப்படியாகத்தான் இருந்தது. இரு பந்துகளில் பன்னிரண்டு ரன்கள் எடுக்க வேண்டும். ஒரு பந்து சிக்ஸருக்கு சென்றாலும், மறு பந்து சிக்ஸருக்கு செல்லாது என்ற எண்ணமே பரவலாக இருக்க அதை உடைத்தார், திவாட்டியா.
ஓடின் வீசிய ஐந்தாவது பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார், திவாட்டியா. இதனால் மீதமிருக்கும் ஒரு பந்தில் ஆறு ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இதனால் போட்டி பார்க்கும் அனைவரிடத்திலும் பரபரப்பு தோற்றிக்கொண்டது. பஞ்சாப் பக்கம் வெற்றி என்ற எண்ணம் இருந்தும் பரபரப்பு எவரையும் விட்டுவைக்கவில்லை.
ஓவரின் ஆறாவது பந்தை ஓடின் வீச, அப்பந்தையும் சிக்சர் பக்கம் திருப்பி குஜராத் அணியின் வெற்றியை உறுதி செய்தார், திவாட்டியா. எவராலும் நம்ப முடியாத அளவுக்கு இந்த வெற்றியானது இருக்க, ஓட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் இந்த ஆட்டத்தை கொண்டாடினர். பலரும் இந்த ஐபிஎல் தொடரில் இப்போட்டிதான் விறுவிறுப்பானது என்று தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஆட்டத்திற்கான ஆட்டநாயகன் விருதை சுப்மன் கில் பெற்றார்.