ஜியோ நிறுவனத்தின் நன்கொடை மூலம் தானியங்கி லட்டு தயாரிக்கும் இயந்திரம் நிறுவப்பட இருப்பதாக திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தற்போது தொன்றுதொட்டு இருந்து வரும் லட்டு தயாரிப்பு முறையான பூந்தி கன்வேயர் பெல்ட் மூலம் கோயிலுக்கு அனுப்படுவதாகவும், பிறகு பூந்தியை ஊழியர்கள் கைகளால் உருண்டை பிடித்து லட்டுவாக தயார் செய்வதாகவும் அதன் பின்பு மீண்டும் கன்வேயர் பெல்ட் வழியாக கவுன்டர்களுக்கு அனுப்படுவதாக தெரிவித்தார்.
திருப்பதியில் பக்தர்களுக்கு விற்பனை செய்வதற்காக ஒரு நாளைக்கு 3 லட்சத்திற்கும் அதிகமான லட்டுகள் தயார் செய்யப்படுவதாக தெரிவித்த அவர், இதில் 500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுவதாகவும் கூறினார்.
மனித சக்தியை மட்டுமே பயன்படுத்தி பூந்தி தயாரிப்பதால் காலதாமதம், பொருட்கள் வீணாவது போன்ற சம்பவங்கள் நேரிடுவதாகவும், பூந்தி தயாரிப்பை இயந்திர மயமாக்குவது குறித்து தேவஸ்தான நிர்வாகம் கடந்த ஓராண்டு காலமாக பல ஆய்வுகளை மேற்கொண்டு வந்ததாகவும் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்தார்.
இதற்கென தேவஸ்தான அதிகாரிகள் பல நிறுவனங்களுக்கு சென்று அங்கு இனிப்பு உள்ளிட்ட பொருட்களை தயார் செய்யும் முறையை பரிசீலித்து வந்ததாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர், தானியங்கி இயந்திரம் மூலமாக பூந்தி தயாரிக்க 50 கோடி ரூபாய் நன்கொடை வழங்க ஜியோ நிறுவனம் முன்வந்து இருப்பதாக தெரிவித்தார். மேலும் விரைவில் இந்த இயந்திரம் திருமலையில் பொருத்தப்படும் என்றும், இதற்கான சோதனை விரைவில் தொடங்கும் என்றும் கூறினார்.
காற்றழுத்த தாழ்வுப்பகுதி எதிரொலி: அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு