திரிபுரா முதலமைச்சராய் இருந்த பிப்லப் குமார் தேப் இன்று திடீரென பதவி விலகியுள்ளார். வியாழக்கிழமை டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்துவிட்டு திரிபுரா திரும்பிய நிலையில் இன்று தனது ராஜினாமாக் கடிதத்தினை திரிபுரா ஆளுநர் எஸ்.என். ஆர்யாவிடம் இவர் அளித்தார்.
அடுத்த வருடம் திரிபுரா மாநிலத்தேர்தல் வரும் நிலையில் பிப்லப் குமாரின் இந்த திடீர் ராஜினாமா அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘முதலமைச்சரின் இந்த திடீர் ராஜினாமா எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்ன காரணத்திற்காக அவர் ராஜினாமா செய்தார் என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் அவர் கட்சி மேலிடத்தினரைச் சந்தித்த பிறகே இம்முடிவினை எடுத்துள்ளார். இந்த முடிவு கட்சிக்கு நல்ல விதமாக அமையும் என்று நம்புகிறோம்’ என் திரிபுரா அமைச்சரவையில் உள்ள ஒரு அமைச்சர் கூறியுள்ளார்.
திரிபுரா மாநில பாஜகவினர் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக சமூக ஊடகங்கள் தெரிவித்துக் கொண்டிருந்த நிலையில் இன்று முதலமைச்சர் ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில், அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக இன்று 5 மணிக்கு கட்சி சந்திப்பு உள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. பிப்லப் குமாரினை கட்சியின் உட்கட்டமைப்பினை மேம்படுத்துவதற்கான பொறுப்பு அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. கிடைக்கப்பட்ட தரவுகளின் படி தற்போது துணை முதலமைச்சராய் இருந்து வரும் ஜிஷ்ணு தேவ் வர்மா இடைக்கால முதலமைச்சராய் பதவி வகிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது
2018ம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்றவர் பிப்லப் குமார் தேப். 1998 முதல் 2018 வரை தொடர்ச்சியாகப் பதவியில் இருந்த மார்க்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினை தோற்கடித்திருந்தது பாஜக மற்றும் ஐபிடிஎப் கூட்டணி.
அஜித்குமாரின் அடுத்த திரைப்படத்திற்கான டைட்டில் இதுவா? புகைப்படத்திற்கு பின் உள்ள கதை இதுதானா?