இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 329 புலிகள் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் மத்திய சுற்றுச்சூழல் இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே புலிகள் சம்பந்தமாக அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார்.
அந்த அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
- இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 329 புலிகள் உயிரிழந்துள்ளது.
- உயிரிழந்த 329 புலிகளில், 2019-ம் ஆண்டு 96 புலிகளும், 2020-ம் ஆண்டு 106 புலிகளும் , 2021-ம் ஆண்டு 127 புலிகளும் உயிரிழந்துள்ளது.
- இயற்கையான காரணங்களால் 69 புலிகளும், இயற்கைக்கு மாறான விதத்தில் 5 புலிகளும், வேட்டையாடப்பட்டு 29 புலிகளும், 30 புலிகள் மற்ற காரணங்களால் உயிரிழந்துள்ளது. மீதமுள்ள 197 புலிகளின் மரணம் தொடர்பாக ஆய்வு நடைபெற்று வருகிறது.
- முக்கியமாக, 2019 ஆம் ஆண்டை விட 2021-ல் புலிகள் வேட்டையாடப்பட்டது குறைந்துள்ளது. மேலும், 125 மனிதர்கள் புலிகளால் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு அஸ்வினி குமார் சௌபே சமர்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “கடந்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் 307 யானைகள் மின்சாரம், ரயில் விபத்து, உடல்நலக் குறைவு, வேட்டையாடுதல் ஆகிய காரணங்களால் உயிரிழந்தள்ளன.
அவற்றில் 222 யானைகள் மின்சாரம் தாக்கியதில் பலியானவை என்றும் அதில் ஒடிசாவில் 41 யானைகளும், தமிழகத்தில் 34 யானைகளும் மற்றும் அசாமில் 33 யானைகளும் உயிரிழந்துள்ளது.”
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியாவில் இந்த ஆண்டு மட்டும் இதுவரையில் 74 புலிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் தேசிய விலங்குக்கு நேர்ந்த அவலம்!