சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் மின்கசிவு காரணமாக குளிர்பதன பெட்டி வெடித்து மூச்சுத் திணறி 3 பேர் உயிரிழந்தனர்.
சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்திற்குள் வரும் ஊரப்பாக்கத்தில் கோதண்டராமன் எனும் நகர் உள்ளது. இந்நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், இன்று அதிகாலை மின்கசிவு காரணமாக குளிர்பதன பெட்டி (refrigerator) வெடித்தது. இதனால் ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக, அந்த வீட்டில் வசித்து வந்த 63 வயதான கிரிஜா, 55 வயதான அவரது தங்கை ராதா, 48 வயதான உறவினர் ராஜ்குமார் ஆகியோர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். அதே குடும்பத்தைச் சேர்ந்த 35 வயதான பார்கவி மற்றும் அவரது மகள் ஆராதியா ஆகிய இருவரும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மகள் ஆராதியா அதிக புகையை சுவாசித்ததால் நுரையீரல் பாதிக்கப்பட்டிருக்குமோ என்ற கோணத்தில் பரிசோதனை நிகழ்த்தவும், மேல் சிகிச்சைக்காக எழும்புர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, சம்பவம் நடந்த பகுதிக்கு வண்டலூர் வட்டாட்சியர் பாலாஜி, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் ஆகியோர் விரைந்து சென்று நேரில் ஆய்வு செய்தனர்.
முன்னதாக, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதன்பின்பு, கூடுவாஞ்சேரி காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்றி, அக்கம் பக்கத்தில் உள்ளோரிடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒரே குடும்பத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மூத்த பேராசிரியர்கள் பதவி உயர்வை தாமதப்படுத்தக் கூடாது – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்