திருப்பூரில் ஆதரவற்றோர் விடுதியில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த திருமுருகன்பூண்டியில் ஸ்ரீ விவேகானந்த சேவாலயம் செயல்பட்டு வருகிறது.
இங்கு சுமார் 10 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதுகாப்புடன் அரவணைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வழக்கம் போல நேற்று காலையில் அந்த விடுதியில் சிறுவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதனை சாப்பிட்ட சிறுவர்கள் சிறிது நேரத்தில் மயக்கமடைந்தனர். உடனே அவர்கள் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த போது உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழத்தனர்.
மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட 11 பேர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களை நேரில் சந்தித்த திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் மருத்துவர்களிடம் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: மக்களே உஷார்! தமிழகத்தில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மக்கள் அச்சம்
உயிரிழந்த 3 சிறுவர்களில் ஒருவரின் உடல் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 2 சிறுவர்களின் உடல்கள் விவேகானந்த சேவாலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது:
இந்த இல்லத்தில் ஒரு சிறுவன் மட்டும் வீட்டுக்கு சென்றுவிட்ட நிலையில், மொத்தம் 14 மாணவர்கள் தங்கியுள்ளனர். 4-ம் தேதி மதியம் வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட சுண்டல், பொறிகடலையைச் சாப்பிட்டுள்ளனர். அதேபோல் 5-ம் தேதி வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட லட்டு, இட்லி, சட்னி, கொண்டைக்கடலை, வெண்பொங்கல் ஆகியவற்றை சாப்பிட்டுள்ளனர்.
நேற்று இல்லத்தில் செய்த ரச சாதம் மதியம் வழங்கப்பட்டுள்ளது. மதியமே அனைவருக்கும் காய்ச்சல் இருந்ததால் யாரும் சாப்பிடவில்லை. நேற்றிரவு பசியில்லை என கூறியுள்ளனர். காய்ச்சல் ஏற்பட்டதால் டோலோ 650 பாதி மாத்திரை கொடுக்கப்பட்டுள்ளது. அதிக காய்ச்சல் ஏற்பட்ட ஒரு சிறுவன் மட்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் ரசம், சாதம், ஊறுகாய், தண்ணீர் உள்ளிட்டவை சோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதால், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 174(3)ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் உதவி ஆணையாளரே புலானய்வு அதிகாரியாக நியமிக்கப்பட்டு, இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.