அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்கான திட்ட அறிக்கை தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் விருதுநகர், மதுரை, தேனி, சிவகங்கை , ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று (ஆகஸ்ட்-25) நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்தார். மேலும், பள்ளிக் கல்வித் துறை ஆணையர் க.நந்தகுமார் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது :
பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகளை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மூலம் வழங்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 70 லட்சத்தைக் கடந்துள்ளது. இதனை மேலும் அதிகரிக்க வேண்டும். கல்வித் துறை அதிகாரிகள் அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமல்லாது தனியார் பள்ளிகளிலும் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பள்ளி செல்லா குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களை பள்ளிகளில் மீண்டும் சேர்த்து இடைநிற்றல் இல்லா மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும்.
மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்க 800 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகளில் தூய்மைப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது. இப்பணிகளை உள்ளாட்சி நிர்வாகம் மூலம் மேற்கொள்ள வேண்டும்.
மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் விதமாக, மாநில அளவில வாரம் ஒருமுறை நூலகத்திற்கு சென்று ஒரு புத்தகத்தை வாசிக்க செய்து, அதிலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டு வெற்றி பெறும் மாணவர்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லும் திட்டம் உள்ளது. மதிப்பெண்கள் மட்டுமே மாணவர்களை மதிப்பீடு செய்யாது. எனவே மாணவர்கள் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது.
அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்கான திட்ட அறிக்கை தயார் நிலையில் உள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் என்றார்.
இவ்வாறாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு பரிசு பொருட்கள்..