ஊரக வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புத் துறை அமைச்சராக இருக்கும் கே.ஆர்.பெரியகருப்பன் மீது போடப்பட்டிருந்த 3 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆட்சி காலத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம், தேர்தலின் போது அதிக வாகனங்கள் பயன்படுத்தியது மற்றும் அனுமதியின்றி கட்சி அலுவலகத்தை திறந்தது உள்ளிட்டவை தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்யும் படி அமைச்சர் பெரியகருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதன்படி அமைச்சர் பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் தரப்பில் ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் பங்கேற்றதற்காக அதிமுக ஆட்சியில் உள்நோக்கத்தோடு இந்த வழக்குகள் தொடரப்பட்டதாகவும், அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சர் மீதான 3 வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.