கிருஷ்ணகிரியில் ராணுவ வீரரை கொலை செய்த வழக்கில் திமுக பேரூராட்சி வார்டு உறுப்பினர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த இருக்கும் வேலம்பட்டி, எம்.ஜி.ஆர் பகுதியைச் சார்ந்தவர் பிரபாகரன் (33). இவரது தம்பி பிரபு (29). இவர்கள் இருவரும் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி காலை பிரபாகரன் அவரது வீட்டின் அருகே இருக்கும் நீர்த்தேக்க தொட்டியின் பக்கத்தில் துணி துவைத்துள்ளார். அப்போது அங்கு வந்த நாகோஜனஹள்ளி பேரூராட்சி 1-வது வார்டு உறுப்பினர் சின்னசாமி அங்கு வந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்து சென்ற சின்னசாமி, பிறகு சிறிது நேரம் கழித்து 10 க்கும் மேற்பட்ட உறவினர்களுடன் வந்து பிரபாகரன் மற்றும் பிரபு ஆகிய இருவரையும் கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பிரபு, ஓசூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிரபு உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக நாகரசம்பட்டி காவல்துறையினர், திமுகவைச் சேர்ந்த சின்னசாமி உள்பட 9 பேரை கைது செய்தனர்.
‘லியோ’ மற்றுமொரு விஜய் படமல்ல; அதுக்கும் மேலே! – லியோ ஸ்பெஷல்