நடிகர் விஜய் தென்னிந்திய திரையுலகில் உள்ள முதன்மையான நடிகர்களுள் முக்கியமானவர். தமிழ் படங்களில் மட்டுமே நடித்தாலும், இவரது படங்கள் பிற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும் வழக்கம் உள்ளது. இந்த டப்பிங் செய்யப்பட்ட படங்களால் விஜய்க்கு கேரளா, ஆந்திரா, தெலுங்கனா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் ரசிகர் கூட்டம் அதிகளவில் உருவானது.
இதனால், தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகர் என்கிற அந்தஸ்தை விஜய் பெற்றார். அதேநேரம், வட இந்தியாவில் விஜய்யால் தென்னிந்தியாவில் பெற்ற புகழை பெறமுடியவில்லை. விஜய் மட்டுமல்ல எந்த தென்னிந்திய நடிகருக்கும் வட இந்தியாவில் பெரிய அளவில் புகழ் இல்லை. ரஜினி மற்றும் கமல்ஹாசனுக்கு விதிவிலக்கு. ஏனென்றால் இவர்கள் இருவரும் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் நேரடி இந்தி படங்களில் நடித்து தங்களுக்கென ஒரு இடத்தை இந்தி திரையுலகில் பெற்றிருந்தனர். ஆனால், அது காலப்போக்கில் மலிந்து விட்டது.
எந்திரன், விஸ்வரூபம் போன்ற படங்கள் இந்திய அளவில் நன்றாக ஓடினாலும் அவர்களின் அதற்கு அடுத்த திரைப்படங்கள் வரும்போது அதன் தாக்கம் பெரிய அளவில் இல்லை. அதேநேரம், தற்போதைய காலக்கட்டத்தில் பாகுபலி, கேஜிஎஃப், காந்தாரா, ஆர்ஆர்ஆர் படங்களின் தாக்கம் என்பது அந்த நாயகர்களின் அடுத்த அடுத்தப் படங்களிலும் பிரதிபலிக்கிறது. உதாரணமாக, பாகுபலி படத்தில் நடித்த பிரபாஸ் அதற்கு அடுத்து சஹோ, ராதே ஷ்யாம் போன்ற படங்களில் நடிக்க அப்படங்களுக்கு பிரபாஸ் ஒரு க்ரவுட் புல்லராக (crowd puller) இருந்தார். இருந்தாலும் அப்படங்கள் ஒடவில்லை என்பது வேறுகதை.
வெறுமனே நடிகர்கள் மட்டுமல்லாது அப்படங்களின் இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்குமே பாகுபலி மற்றும் கேஜிஎஃப் படத்தின் வெற்றி மிக முக்கியமாக அமைகிறது என்றுதான் சொல்ல வேண்டும். From the team of bahubali, from the team of kgf என்று போடும்போதே அதற்கான எதிர்பார்ப்பு என்பது அதிகமாகி விடுகிறது. ரஜினி, கமல், விஜய், அஜித் போன்றோர் நெடுங்காலமாக இருந்தாலும், அவர்களுக்கென திரைக்கு வரும் கூட்டம் இருந்தாலும் வட இந்தியாவில் அது போதுமானதாக இல்லை என்பதே கள எதார்த்தம்.
ஆனால், தற்போது அந்தக் கூட்டத்தை அதிகரிக்கும் முயற்சியில்தான் நடிகர் விஜய் இறங்கியுள்ளார். டப் செய்யப்பட்ட விஜய்யின் படங்களில் பல இந்தியில் திரையரங்கில் இல்லையென்றாலும், தொலைக்காட்சிகளில் அதிகளவில் வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், இந்திய அளவில் ஒரு படத்தை கொடுத்து அதை பெரிய ஹிட் ஆக்கிவிட வேண்டுமென்ற எண்ணம் விஜய்க்கு உள்ளது. அந்த எண்ணத்தின் அடிப்படையிலேயே விஜய்யின் அடுத்தப் படமான ‘லியோ’ உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படம் பான்-இந்தியா திரைப்படமாக உருவாகிறது. அதற்கான புரோமஷன்கள் இப்போதே ஆரம்பித்துவிட்டன. ஜனவரி 31 முதல் பிப்ரவரி 3 வரை ‘லியோ’ படம் சமூகவலைதளத்தை தன் வசத்தில் வைத்திருந்தது என்றால் அது மிகையாகாது. அந்த நான்கு நாட்களில் லியோ படம் ஏற்படுத்திய அதிர்வுகளை கடந்த ஆண்டுகளில் எந்தத் தமிழ் திரைப்படமும் நிகழ்த்தவில்லை. பொன்னியின் செல்வனும், விக்ரமும் கூட அந்த அளவிற்கான அதிர்வுகளை ஏற்படுத்தவில்லை என்பது நிதர்சனம்.
‘லியோ’ ஏற்படுத்திய அதிர்வுகள் தானாக ஏற்படுத்தப்பட்டவை அல்ல. அது முழுக்க முழுக்க திட்டமிட்ட ஒன்றுதான். படக்குழு அதற்கேற்றார் போல் ஒவ்வொன்றையும் செய்தார்கள். டைட்டிலை அறிவிப்பதற்கே லியோ படக்குழு பல திட்டங்களை வகுத்து அதை சரியாக செயல்படுத்தினார்கள். எந்த படத்துக்கும் இல்லாத ஒரு முனைப்பு இந்தப் படத்திற்கு தயாரிப்புக்குழு செலுத்தியுள்ளது.
இதற்கு அடிப்படை என்னவென்று பார்த்தால் ‘லியோ’ திரைப்படத்தை இந்திய அளவில் ஒரு மாபெரும் வெற்றிப்படமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான். தென்னிந்தியாவிலிருந்து பாகுபலி, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் போன்ற திரைப்படங்கள் இந்திய அளவில் சாதனை செய்துக்கொண்டிருக்க, தமிழ்த்திரைப்படங்கள் அந்த சாதனைகளை நிகழ்த்த தவறி வருகின்றன. பலரும் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் வட இந்தியாவில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. விக்ரமிற்கும் இதே நிலைதான் ஏற்பட்டது.
இந்த நிலை லியோ படத்திற்கு ஏற்படா வண்ணம் படக்குழு பல்வேறு காரியங்களில் இறங்கியுள்ளது. குறிப்பாக படம் குறித்த வலுவான நம்பிக்கையை படம் வெளியாகும் முன்னே ரசிகர்களிடத்தில் விதைக்க வேண்டும் என்பதில் லியோ படக்குழு தீவிரம் காட்டத் தொடங்கியிருக்கிறது. லியோ படக்குழுவின் இந்தத் தொடக்கம் தமிழ்த் திரையுலகை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லுமா என்பது இந்த ஆண்டின் அக்டோபர் மாத இறுதிக்குள் தெரிந்துவிடும்.
மனிதன் நிம்மதியாய் வாழ சிவாஜி கணேசனின் மூலமாக , கண்ணதாசன் கூறிய ஆறு கட்டளைகள்!