திமுக காங்கிரஸ் கூட்டணி வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என திருநாவுக்கரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர்,
மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில், தாலுக்கா மருத்துவமனைகளில் டயலாசிஸ் வசதி அதேபோல் கேன்சர் நோய்களுக்கான சிகிச்சை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துளோம் என கூறினார்.
காங்கிரஸ் கட்சியில் தற்போது நடைபெற்று வரும் குழப்பங்கள் குறித்தான கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர்,
கட்சி என்று இருந்தால் கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம் இவை பேசி சரி செய்ய வேண்டிய விஷயம் என்றார்.கடல் என்று இருந்தால் அலைகள் இருப்பது போல கட்சி என்று இருந்தால் பிரச்சனைகள் இருப்பது இயல்பு எனவும் இவை தமிழக காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் பாதிக்காது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவரை நியமிப்பது தொடர்பான முடிவுகள் அகில இந்திய காங்கிரஸ் தலைமை முடிவு செய்ய வேண்டிய விஷயம் எனவும் தமிழக காங்கிரஸ்தலைவர்கள் டெல்லி சென்று காங்கிரஸ் தலைமையை சந்திப்பது வழக்கமான ஒன்று எனவும் கூறினார்.
திமுக காங்கிரஸ் கூட்டணி தெளிவாக உள்ளது எனவும் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் திமுக அதிமுகவுக்கு பிறகு காங்கிரஸ் பெரிய கட்சி தான். தமிழகத்தில் பா.ஜக வளர்ந்து ஆட்சியை எல்லாம் பிடிக்க முடியாது என விமர்சித்த அவர் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி என பேசுபவர்கள், பா.ஜ.க அதிமுக கூட்டணியிலிருந்து விலகி பா.ஜ.க தலைமையில் கூட்டணி அமைக்குமா என கேள்வி எழுப்புவதில்லை என்றார்.