கால்பந்து உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் ஈகுவடார் அணி 2-0 என்ற கணக்கில் கத்தார் அணியை வீழ்த்தி வெற்றிப் பெற்றது.
கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் நேற்று கத்தார் – ஈகுவடார் அணிகள் மோதின. இந்த ஆட்டமானது, அல் பேத் மைதானத்தில் நடைபெற்றது.
உலகக் கோப்பையை நடத்தும் கத்தார் அணி தனது முதல் போட்டியில் வெற்றி வாகைசூடும் என்ற ஆர்வத்துடன் மைதானத்தில் கத்தார் மக்கள் சூழ்ந்திருந்தனர். ஆனால், நடந்தது அதுவல்ல.
ஆட்டம் ஆரம்பித்து, 15- ஆவது நிமிடத்தில் ஈகுவடார் வீரர் எனர் வாலென்சியாவை தள்ளிவிட்டதால் கத்தார் வீரர் சாத் அல் ஷீபுக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. இதனால், ஈகுவாடருக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது.
இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக்கொண்ட வாலென்சியா, நடப்பு உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் கோலை அடித்தார். இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் போக்கு ஈகுவடார் பக்கமே நீடித்தது.
இந்நிலையில், ஆட்டத்தின் 31-ஆவது நிமிடத்தில் சக வீரர் பிரெசியாடோ தூக்கியடித்த பந்தை வாலென்சியா தலையால் முட்டி ஈகுவடாருக்காக 2-ஆவது கோல் அடித்தார். இவ்வாறாக முதல் பாதி முடிவில் ஈகுவடார் 2-0 என முன்னிலையில் இருந்தது.
அடுத்தப் பாதியில் கத்தார் கோல் அடிக்கும் என அனைவரும் எதிர்பார்க்க, ஒரு கோல் கூட அடிக்காமல், ஈகுவடார் அணியிடம் 2-0 என்ற கோல் கணக்கில் கத்தார் தன் தோல்வியைப் பதிவு செய்தது.
கால்பந்து உலகக் கோப்பை – விடாது துரத்தும் சர்ச்சையிலும் 220 பில்லியன் டாலர் செலவு செய்த கத்தார்..